விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் செல்வத்திடம் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.
மாலை வரை நீடிக்கும் தேர்தல் பரபரப்பு:
அரசியலில் புதிதாக களம் கண்ட விஜய்யின் தவெக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, 105க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றிகளை குவித்து வருகிறது. குறிப்பாக, தவெக முன்னிலை வகித்தாலும் பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக காலை தொடங்கிய தேர்தல் பரபரப்பு மாலை வரை நீடித்து வருகிறது. குறிப்பாக, பிற்பகல் வரை 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக, அதன்பின் 2வது இடத்தை தக்கவைத்து வருகிறது. இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவு இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் குழப்பமானதாக அமைந்துள்ளது.பொய்யான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்:
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை திமுக தனிப்பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக ஆட்சி அமைக்கும் என்றுமே கூறியிருந்தன. அதில், Axis my india நிறுவனம் வெளியிட்ட ஒரு கருத்துக்கணிப்பு மட்டுமே விஜய்யின் தவெக வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் அனைத்தும் யாரும் எதிர்பாராத வகையில், தவெகவுக்கு ஆதரவாக வந்துள்ளன. இன்று காலை தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, தவெக முன்னிலை வகித்து வருகிறது.ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற தேமுதிக:
இந்நிலையில், இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளை பெற்ற தேமுதிக, 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அதேசமயம், காலை முதல் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், விருதுநகர் தொகுதியில் முன்னிலை வகித்து வந்தார். எனினும், அது வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நீடிக்கவில்லை. இதையடுத்து, எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் செல்வத்திடம் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபிரபாகரன் தோல்வியை தழுவியுள்ளார்.விருதுநகர் தொகுதியில் 2வது முறையாக தோல்வி:
ஏற்கெனவே, 2024ல் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவினார். அதேசமயம், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ சீனிவாசனுக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டு, விஜயபிரபாகரனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2வது முறையாக அந்தத் தொகுதியில் போட்டியிடும் அவர், நிச்சயம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தவெகவின் அதீத எழுச்சியால் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.
