Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞர்கள் - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்

யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞர்கள் - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்

TV9 Tamil 7 hrs ago
தூத்துக்குடி, ஆகஸ்ட் 23 :தூத்துக்குடியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது நாட்டு வெடிகுண்டுகளை வெடித்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் லெவஞ்சிபுரம் என்ற ஊரை சேர்ந்த அலெக்ஸ், அமுதா நகரை சேர்ந்த பிரகாஷ், சுடலை காலனியை சேர்ந்த குரு என்ற 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிறந்த நாளுக்காக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அலெக்ஸ் என்பவரின் பிறந்த நாள் கடந்த 2 நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நண்பர்களான மூவரும் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்திருக்கின்றனர் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இதனை தங்கள் மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடும் வகையில் அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோவை தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாட்டு வெடி குண்டுகளை வெடிக்க செய்த சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த விவகாரம் காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரகாஷ், தேன்பாகம் போலீசாருக்கு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவின்பேரில் தேன்பாகம் போலீசார் விசாரணையைத் தொடங்கி, அலெக்ஸ், பிரகாஷ் மற்றும் குரு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

யூடியூப் வீடியோக்களை பார்த்து வெடிகுண்டு தயாரித்த இளைஞர்கள்

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பது மற்றும் அவற்றை வெடிக்கச் செய்வது தொடர்பான தகவல்களை யூடியூப் வீடியோக்களை பார்த்து தெரிந்துகொண்டதாக அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தங்கள் பகுதியில் தங்களை பிரபலமாக காட்டுவதற்காகவும் இந்த செயலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களின் வீடுகளையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகள் வேறு எங்கும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைத்தது என்றும் விசாரித்து வருகின்றனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி இளைஞர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வெடிக்க செய்த இளைஞர்களின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil