தஞ்சாவூர்: பூதலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில், சித்திரக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு பலகை முள் புதர்களால் முழுமையாகச் சூழப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.
பூதலூர் – தஞ்சாவூர் முக்கியச் சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பயணித்து வருகின்றன. சித்திரக்குடி கிராமப் பகுதியில் மக்கள் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டும், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை இருப்பதை தூரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், சாலையோரம் எச்சரிக்கை அறிவிப்பு பலகை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால், அந்த அறிவிப்பு பலகையைச் சுற்றி காட்டுச்செடிகளும், முள் புதர்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதன் காரணமாக, அறிவிப்பு பலகையில் உள்ள வாசகங்கள் முற்றிலும் மறைக்கப்பட்டு, சாலையில் வருபவர்களுக்கு அது இருப்பது கூடத் தெரிவதில்லை.
இதனால், இரவு நேரங்களிலும், வரும் புதிய வாகன ஓட்டிகளும் வேகத்தடை இருப்பது தெரியாமல் திடீரென பிரேக் போடுவதால் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பு பலகை புதருக்குள் மறைந்திருப்பது ஆபத்தானது. அசம்பாவிதங்கள் ஏதேனும் நடப்பதற்குள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அறிவிப்பு பலகையை மறைத்திருக்கும் முள் புதர்களை அகற்றி, அது வாகன ஓட்டிகளுக்குத் தெளிவாகத் தெரியும்படி செய்ய வேண்டும்”என கோரிக்கை விடுத்துள்ளனர்.
