மாநில அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக சிறைகளில் பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்திருந்தார்.
ஆளுநரின் இந்த உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி, அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், கொள்கை ரீதியான முடிவுகளில் அவர் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே இரு வெவ்வேறு அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருந்த நிலையில், இந்த மூன்று நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு தற்போது தெளிவான சட்ட விளக்கத்தை அளித்துள்ளது. இது மாநில அரசின் அதிகார வரம்பை உறுதிப்படுத்தும் ஒரு வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva

