ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதலால் தனது சர்வதேச வாழ்க்கை முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாக முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பகீர் புகாரை கிளப்பியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் ஐபிஎல் விளையாட முடிவெடுத்தபோது இங்கிலாந்து வாரியம் தனக்கு எதிராக ஊடகங்களை பயன்படுத்தி சதி செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"ஐபிஎல்-க்காக நான் பெரிய தியாகங்களை செய்தேன், என் கேரியரையே இழந்தேன். நான் 150-160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,000 ரன்களை குவித்திருக்க வேண்டியவன். ஆனால் 33 வயதிலேயே எனது இங்கிலாந்து வாழ்க்கை முடிக்கப்பட்டது," என்று அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
எனினும், தனது போராட்டத்தால் இன்று ஜோஸ் பட்லர் போன்ற தற்போதைய வீரர்கள் சுதந்திரமாக ஐபிஎல் விளையாடி பலன் பெறுவதை கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன், 8,181 ரன்களுடன் தனது சர்வதேச பயணத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva

