சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஆதரித்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.
கேரளா சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது" என்று வாதிட்டுள்ளார்.
ஐயப்பன் 'நைஷ்டிக பிரம்மச்சாரி' கோலத்தில் இருப்பதால், இந்த மரபு கடைபிடிக்கப்படுவதாகவும், இது பெண்களை கீழ்த்தரமாக நடத்துவதோ அல்லது தீண்டாமையோ அல்ல என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஒரு மதத்தின் அத்தியாவசியமான சடங்கு எது என்பதை அந்தந்த மத பிரிவினரே தீர்மானிக்க வேண்டும் என்றும், அதை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய இயலாது என்றும் 246 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது அமைதி மற்றும் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு இல்லாதவரை, காலங்காலமாக பின்பற்றப்படும் மத ரீதியான நடைமுறைகளை பாதுகாப்பதே அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியம் என்றும் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
Edited by Siva

