அன்னக்கிளி திரைப்படம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. அதன்பின் அவரின் பாடலே பட்டிதொட்டியெங்கும் பாடியது.
சுமார் 30 வருடங்களுக்கும் மேல் அவர் கோலிவுட்டில் உண்மையிலேயே ராஜாவாக இருந்தார். அவரின் பாடல்களையும், பின்னணி இசையையும் நம்பியே பெரும்பாலான படங்கள் உருவாகின.
ரஜினி, கமல், மோகன், ராமராஜன், பிரபு, கார்த்திக், சத்யராஜ் என 80,90களில் முக்கிய நடிகராக இருந்த எல்லோரும் தங்கள் படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையை நம்பியிருந்தனர். அதேநேரம், 1992ம் வருடம் ரோஜா திரைப்படம் மூலம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார். அவரின் இசை இளசுகளை ஆட்டம் போட வைத்தது.
முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான். இளைஞர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு ரசிகர்களாக மாறினார்கள். அதன்பின் சுமார் 25 வருடங்கள் கொடி கட்டி பறந்தார் ரஹ்மான். அதோடு, தேவா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களும் நிறைய படங்களுக்கு இசையமைத்தனர். தற்போது அனிருத், சாய் அபயங்கர் வந்துவிட்டார்கள். இதனால் இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்துபோனது.
குறிப்பாக இளம் இயக்குனர்கள் இளையராஜா பக்கம் போகவே இல்லை. அதேநேரம், வெற்றிமாறன் தான் இயக்கிய விடுதலை மற்றும் விடுதலை 2 ஆகிய படங்களில் இளையராஜாவை இசையமைக்க வைத்தார். தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் பாக்கெட் நாவல், கார்த்திக் சுப்பாராஜின் புதிய படம், மாரி செல்வராஜின் மஞ்சனத்தி ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இளம் இயக்குனர்கள் இளையராஜா பக்கம் செல்வது ராஜாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

