சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
அவர் நடிகராக மட்டுமின்றி, தனது எஸ்கே புரோடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தரமான கதைகளைத் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில், அவர் தயாரிப்பில் வெளியாகி தமிழகமெங்கும் தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பிய திரைப்படம் தான் தாய்கிழவி .
இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றைப் பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார்.
சினிமாவில் பெரிய ஸ்டார்கள், பிரம்மாண்ட பட்ஜெட் இருந்தால் தான் படம் ஓடும் என்ற விதியை 'தாய்கிழவி' அடியோடு உடைத்துள்ளது. வெறும் ரூ. 10 கோடி என்ற மிகக் குறைந்த பட்ஜெட்டில் இப்படம் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனால் உருவாக்கப்பட்டது. திரையரங்குகளில் வெளியான நாள் முதலே பாசிட்டிவ் விமர்சனங்களால் அலைமோதிய இப்படம், தியேட்டர்களில் 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
உலக அளவில் இப்படம் சுமார் ரூ. 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, அதிக லாபத்தை வாரிக்குவித்த மெகா ஹிட் படங்களில் 'தாய்கிழவி' முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.
இப்படத்தின் தலைப்புக்கேற்ப, கதையின் மையப்புள்ளியாகவும் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப் பிடிக்கும் தூணாகவும் மூத்த நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்தார். அவரது எதார்த்தமான, மிரட்டலான நடிப்புக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியில் பலத்த கைதட்டல் கிடைத்தது.இயக்குநர் சிவகுமார் முருகேசன், ராதிகாவின் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதமும், அதற்குள் ஒளிந்திருந்த எமோஷனல் மற்றும் கமர்ஷியல் கூறுகளும் தான் படத்தைத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, சென்னை எஸ்கே புரோடக்ஷன்ஸ் அலுவலகத்தில் ஒரு பிரத்யேக வெற்றிக் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் ராதிகா சரத்குமார், இயக்குநர் சிவகுமார் முருகேசன் மற்றும் 'தாய்கிழவி' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
விழாவின் படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசனின் உழைப்பைப் பாராட்டும் விதமாக, அவருக்குப் புதிய விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றின் சாவியை நடிகர் சிவகார்த்திகேயன் பரிசாக வழங்கினார். எதிர்பாராத இந்த சர்ப்ரைஸால் நெகிழ்ந்துபோன இயக்குநர், சிவகார்த்திகேயனுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

