அஜித் நடித்த படத்திலேயே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் வலிமை படம்தான். இந்த படம் உருவானது முதல் படம் முடிந்தது வரை எந்த அப்டேட்டையும் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடவில்லை.
எனவே சமூகவலைத்தளங்களில் மட்டுமில்லாமல் பல இடங்களிலும் அவர்கள் வலிமை அப்டேட் கேட்டார்கள். வானதி சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் கூட அஜித்தின் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டார்கள். அதேபோல் கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் வலிமை அப்டேட் கேட்டு போர்ட்டை காட்டினார்கள்/
வலிமை படம் உருவாகிக் கொண்டிருந்தபோது கொரோனா லாக்டவுன் வந்துவிட்டது. எனவே திட்டமிட்டபடி படத்தை எடுக்க முடியாமல் கதையில் சில மாற்றங்களை செய்தார் ஹெச்.வினோத். ஒருவழியாக 2022 பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை..
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்த ஹெச்.வினோத் 'என் படங்களில் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்ட படம் வலிமைதான். அதற்கு முன் வெளியான விஸ்வாசம் திரைப்படம் அஜித்துக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.. எனவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு மாறியிருந்தது. ஆனால் ஆக்சன், சமூக கருத்து, குடும்ப சென்டிமென்ட் அனைத்தையும் ஒரே படத்தில் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து அது பலனை தரவில்லை. அதேநேரம் அதன்பின் வெளியான துணிவு திரைப்படத்தில் இந்த தவறுகளை பெரும்பாலும் நாங்கள் சரி செய்து விட்டோம்' என கூறியிருக்கிறார்.

