இந்தியாவில் இப்போது கோடை காலம். அக்னி வெயில் முடிந்துவிட்டாலும் இன்னமும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.
இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இந்நிலையில்தான், வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான நெறிமுறைகளை இந்திய வானிலை மையம் மற்றும் தமிழக பொது சுகாதாரத்துறை இணைந்து சில நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். மது, காபி, தேநீர் மற்றும் கார்பனேட்டட் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் பழைய, கெட்டுப்போன உணவுகளை சாப்பிடக்கூடாது. வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் மூடிய கார்களுக்குள் குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளை விட்டுச் செல்லக் கூடாது. வெயில் நேரத்தில் சமைப்பது, உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவேண்டும்.
தாகம் எடுக்கவில்லை என்றாலும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உப்பு கலந்த மோர், இளநீர், எலுமிச்சை சாறு, ஓ.ஆர்.எஸ் கரைசல் ஆகியவற்றை அதிகம் பருக வேண்டும். லேசான, தளர்வான மற்றும் வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வெளியில் செல்லும்போது குடை, தொப்பி, சன் கிளாஸ் ஆகியவற்றை பயன்படுத்தலாம். பகல் நேரத்தில் ஜன்னலை மூடி வைத்தும், இரவு நேரத்தில் ஜன்னலை திறந்து வைத்தும் வெப்பநிலையைக் குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

