தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக மார்ச் 30-ஆம் தேதி அவர் தாக்கல் செய்த முதல் வேட்புமனுவில், தன் மீது எந்த வழக்கும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். ஆனால், 2025இல் பதிவான ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி எதிர்தரப்பினர் விமர்சனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து, சனிக்கிழமை அவர் தாக்கல் செய்த கூடுதல் பிரமாண பத்திரத்தில் அந்த வழக்கை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
முதலில் தாக்கல் செய்த மனுவில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 404 கோடி என குறிப்பிட்டிருந்த விஜய், இரண்டாவது பிரமாண பத்திரத்தில் அதன் மதிப்பை ரூ. 410 கோடி என குறிப்பிட்டுள்ளார்.
ஒரே வாரத்தில் சொத்து மதிப்பில் 6 கோடி ரூபாய் வித்தியாசம் இருப்பது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விஜய்யின் இந்த வேட்புமனு குளறுபடிகள் அவரது அரசியல் எதிரிகளுக்கு புதிய ஆயுதமாக கிடைத்துள்ளன.
Edited by Siva

