நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் தாக்கம் பீகாரிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் இருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளநீர் கந்தக் மற்றும் கோசி நதிகள் வழியாக பீகாருக்குள் நுழைந்து வருகிறது.
இதனால் வெள்ளப்பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை காணப்படாத சில வகை மீன்களும் அடித்து வரப்படுவதாகவும், அவற்றை சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, வெள்ளநீரில் பிடிக்கப்படும் மீன்களை பொதுமக்கள் வாங்கவோ, விற்கவோ, சாப்பிடவோ வேண்டாம் என்று பீகார் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளநீர் கழிவுநீர், இறந்த விலங்குகள் மற்றும் பல்வேறு மாசுகளுடன் கலப்பதால், அதில் கிடைக்கும் மீன்களில் பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடையாளம் தெரியாத அல்லது வழக்கத்திற்கு மாறாக தோன்றும் மீன்களை சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றை சாப்பிட்ட பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, தலைச்சுற்றல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.
வெள்ளநீர் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் கலந்தால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் தேங்கிய நீரால் கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் அதிகரிக்கக்கூடும்.
Edited by Siva

