இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம், லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பொது விநியோக திட்டத்தில் மத்திய அரசு மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருள்களை வழங்குவதற்கு அதற்கான பணத்தை நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்காமல், அரசு தரும் பணத்தைக் கொண்டு கடைகளில் வாங்கிக் கொள்ள முடியும்.
- சட்டப்பேரவையில் ஆளுநர் உரையே தேவையில்லை - முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயிண்ட்

எதற்காக இந்த மாற்றம்?
மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் 80 கோடிக்கும் மேல் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்காக மட்டும் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பல கோடிகளை செலவு செய்து வருகிறது. இருப்பினும் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், போலியான ரேஷன் கார்டுகள் மூலம் பலர் பயனடைந்து வருவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. வருமான வரி செலுத்துபவர்கள், ஜி எஸ் டி வரம்பிற்கு வருபவர்கள், கார் வைத்திருப்பவர்கள் போன்றவர்களும் இந்த இலவச திட்டங்களின் மூலம் பயனடைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது போன்ற மோசடிகளை தடுக்கவும், உண்மையான தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசின் உதவி சென்று சேர்வதை உறுதி செய்யும் இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்
இந்த புதிய திட்டத்திற்கு இ-ரூபி என்ற டிஜிட்டல் முறை பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிகளின் மொபைல் எண்ணிற்கு மாதம் ஒரு முறை டிஜிட்டல் வவுச்சர் அல்லது டோக்கன்கள் வழங்கப்படும். இதன் மதிப்பு ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும். இந்த தொகையை கொண்டு பயனாளிகள் ரேஷன் கடைகளிலும் அல்லது வெளிச்சந்தைகளிலும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வேண்டாம் என நினைப்பவர்கள், இந்த வவுச்சரை பணமாக மாற்றி தங்களது வங்கி கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்திற்கு 500 அல்லது 1000 ரூபாய்க்கு இந்த வவுச்சர்கள் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் அமலாகுமா?
இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கு முன் சண்டிகர், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் இந்த ஆண்டே இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு ரேஷன் கடை விநியோகஸ்தர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. "ரேஷன் கடைகளை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் இந்த திட்டத்தின் மூலம் பாதிக்கப்படும். மேலும், வங்கி கணக்கில் பணம் செலுத்தினால், அதை குடும்ப தலைவர்கள் உணவு பொருட்களுக்குத்தான் பயன்படுத்துவார்களா என்பது சந்தேகமே. இது மதுபானம் போன்ற வேறு செலவுகளுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது," என்று கவலை தெரிவித்துள்ளனர்.
- ஆளுநர் கேட்ட ஒரு கேள்வி... நறுக்குனு முதலமைச்சர் கொடுத்த பதில்

