Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அண்ணாமலை முதல் மாநாட்டை பொள்ளாச்சியில் நடத்துவதன் பின்னணி?

அண்ணாமலை முதல் மாநாட்டை பொள்ளாச்சியில் நடத்துவதன் பின்னணி?

Fnewsnow 1 week ago

ண்ணாமலை தலைமையிலான 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் முதல் மாநில மாநாடு வரும் ஜூலை 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.

அண்ணாமலை தனது முதல் மாநாட்டை நடத்த பொள்ளாச்சியை ஏன் தேர்வு செய்தார் என்பதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தான் ஏற்கெனவே நடத்திவரும் 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் மூலம் மீண்டும் மக்களுக்கான சேவையில் ஈடுபடுவேன் என அறிவித்தார். பொதுமக்களும், இளைஞர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். அண்ணாமலையின் அழைப்பை ஏற்று இந்த இயக்கத்தில் சுமார் 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் இருந்து 'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகள் தொடங்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் முதல் மாநில மாநாடு வரும் ஜூலை 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. அதற்கடுத்து ஜூலை 26 ஆம் தேதி திருச்செந்தூரில் மாநாடு நடைபெறும் என அண்ணாமலை அறிவித்தார்.

'போதை இல்லா பொள்ளாச்சி' என்னும் பெயரில், முதல் மாநாட்டை நடத்துகிறார் அண்ணாமலை. இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி ஆச்சிபட்டி கொங்குசிட்டி மைதானத்தில் மாநாட்டுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் அண்ணாமலையின் ஆதரவாளர்களான வசந்தராஜன், பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

12 ஆம் தேதி பொள்ளாச்சியில் இந்த மாநாட்டில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆச்சிப்பட்டியில் 25 ஏக்கர் பரப்பளவில் இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளை அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர். இந்த மாநாட்டில் அண்ணாமலை என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணாமலை, தனது அரசியல் இயக்கத்தின் முதல் மாநாட்டை பொள்ளாச்சியில் நடத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலைக்கு, கொங்கு மண்டலத்தில் மிகுந்த செல்வாக்கு உண்டு. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் கோவையில் போட்டியிட்டு 2ஆம் இடம் பெற்றார் அண்ணாமலை. அங்கு அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில், மேற்கு மண்டலத்தில் இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல பொள்ளாச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளார் அண்ணாமலை/ இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் அடுத்தடுத்த மாநாடுகள் நடத்தப்படவுள்ளன.

அண்ணாமலையுடன் இணைந்து பாஜகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் பலரும் கோவை பகுதியைச் சேர்ந்தவர்கள். பாஜக முன்னாள் மாவட்ட தலைவர்களான வசந்தராஜன், பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அண்ணாமலையுடன் பயணிக்கும் விசுவாசிகள், முன்னாள் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என ஒரு வலுவான ஆதரவுத் தளம் கோவை பகுதியில் ஏற்கனவே உள்ளது.

பொள்ளாச்சியைத் தேர்வு செய்ததன் மூலம் உள்ளூர் அளவில் பெருமளவிலான மக்களைத் திரட்ட முடியும் என்பது அண்ணாமலையின் கணக்காம். பொள்ளாச்சி மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என அண்ணாமலை தரப்பு எதிர்பார்க்கிறதாம். முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தும் திட்டத்திலேயே, தனக்கு மிகவும் செல்வாக்கான பகுதியை தேர்வு செய்துள்ளாராம் அண்ணாமலை.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow