அதிமுக பொதுச் செயலாளர் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அதிருப்தியாளர்கள் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: முழுமையான பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரி தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அதே நேரம் ஆதரவு அளிக்கும் போதிலும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம். கோவையைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, தேனி மாவட்டத்திலும் நாமக்கல்லை சேர்ந்த தங்கமணி, சேலம் மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதனுக்கு ராமநாதபுரத்திலும் போராட்டம் நடத்த இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே பழைய பதவிகள் தங்களுக்கு கிடைக்கும் என நிர்வாகிகள் காத்திருக்கும் நிலையில் பதவியையும் கொடுக்காமல் வேறு மாவட்டத்தில் போராட சொல்வது எப்படி சரியாகும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
சட்டசபை தேர்தலின்போது தவெக தேர்தல் அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டும் அதாவது 5 ஏக்கருக்கு குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆட்சிக்கு வந்த தவெக அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.
மேற்கண்டவாறு, பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும்; மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் தவெக கூட்டணி அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தவெக அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும்; அப்படி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
இந்நிலையில், தவெக கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை.
எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் தவெக.
அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத தவெக பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடந்ததும் அதிமுக, திமுக இணைந்து ஆட்சி நடத்த பேச்சுவார்த்தை நடத்தியதை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எஸ்பி வேலுமணியின் தலைமையின் கீழ் செயல்பட்டனர். இதையடுத்து அவர்களது பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில் அவர்கள் எல்லாம் எடப்பாடி பக்கம் சென்றுவிட்டனர். சிலர் தவெகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பழைய பதவிகளையே கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிக்கை விட்டுள்ளனர். ஏற்கெனவே சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்குமாறு கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

