Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"கோயில்கள் எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்" - அமைச்சர் ரமேஷ்

"கோயில்கள் எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்" - அமைச்சர் ரமேஷ்

Fnewsnow 1 day ago

'மைக்ரோ மேனேஜ்மென்ட்' முறை மூலம் தமிழகத்தின் அனைத்து கோயில்களும் தனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்போவதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.

ரமேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் பங்கேற்று, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “எங்களது கொள்கை மதச்சார்பற்ற சமூகநீதி. அதுதான் எங்கள் கொள்கையாக எங்களது தலைவர் முன்னிறுத்தினார். அந்த கொள்கையை ஏற்றுக்கொண்டு சாதிய வேற்றுமை தவிர்த்து தந்தை பெரியார், சட்டமேதை அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

சாதியோ, பணமோ, இனமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு நாளும் அந்த உறுதியை நெஞ்சில் தாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

சாதி, பணம், இனம் என எதைப் பார்த்தும் எங்கள் தலைவர் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா என்பதை பார்த்துதான் வாய்ப்பு வழங்கியிருக்கிறார். சாதியை வைத்து இங்கு பேச வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுக்காக இந்த சேவை செய்ய வந்திருக்கக்கூடிய எண்ணத்தை தான் நாம் பார்க்க வேண்டும்.

எங்கள் தலைவருக்காக மட்டுமே அனைவரும் வாக்களித்து உள்ளார்கள். எங்களுக்காக வாக்களிக்கவில்லை. தலைவர் விஜயை திரையில் பார்க்கும்போது யாரும் ஜாதி, மதம், இனம் அடிப்படையில் அவரை பார்க்கவில்லை. அதேபோன்றுதான் எங்களையும் மக்கள் பார்க்கிறார்கள். எங்கள் தலைவருக்கு இதுபோன்ற பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணமும் கிடையாது.

கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் ஒரு நல்ல மனநிலையில் சுவாமி கும்பிட்டுவிட்டு அதே மனநிலையோடு செல்ல வேண்டும். அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது. கோயில்களில் இருக்கக்கூடிய கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படாத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்.

அதேபோன்று கோயில் சார்ந்து இருக்கக்கூடிய சொத்துக்கள், நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் அனைத்தும் மீட்டு கொண்டு வரப்படும்.

இந்து சமய அறநிலைத்துறையில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் அல்ல, கீழ்மட்ட ஊழியர்கள் வரை எந்தவித ஊழலிலும் ஈடுபடவோ, அதிகாரத்தைப் பயன்படுத்தவோ இடம் கிடையாது. 'மைக்ரோ மேனேஜ்மென்ட்' முறை மூலம் அனைத்து கோயில்களும் எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்.

ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் அனைத்தும் திறம்பட செயல்படுத்தப்படும். புதிய திட்டங்களும் கொண்டு வரப்படும். மக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் நிர்வாகம் மேம்படுத்தப்படும்.

திருக்கோயில்களில் இதுவரை ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு, இந்து சமய அறநிலைத்துறை ஒரு சிறந்த துறை என்று அனைவரும் பாராட்டக்கூடிய துறையாக செயல்படுத்துவேன்.

ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் அடிமனை பிரச்சினை அதிகமாக உள்ளது. அதுதொடர்பாக இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. அதன் பின்னர் முழுமையான விவரங்களை தெரிவிக்கிறேன்.

மக்களுக்கு நியாயமான முறையில் என்ன கிடைக்க வேண்டுமோ அதை சரியான முறையில் பெற்று தருவேன். கோயில்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறேன். கொஞ்சம் கால அவகாசம் மட்டும் கொடுங்கள். அனைத்தையும் நிச்சயம் செய்வேன்” என தெரிவித்தார்.

Source : www.fnewsnow.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Fnewsnow