ரேபிடோ, உபேர் போன்ற பைக், கார் டேக்சிகளில் பயணிகள் புக் செய்வதற்கு முன்பு, செயலியில் காட்டும் வாடகை பணத்தில் கூடுதல் பணம் செலுத்தினால் உடனே கேப்டன்கள் புக் செய்கிறார்கள் எனவும், இதனால் கூடுதல் பணம் கொடுக்காத பயணிகளின் டிரிப்பை கேப்டன்கள் புக் செய்வதில்லை என புகார் வரும் நிலையில் மத்திய அரசு இதற்கு செக் வைத்துள்ளது.
ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற வாடகை கார், பைக் செயலிகளை பயன்படுத்தி பயணிப்பவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருக்கும் இடத்தில் இருந்து எளிதாக வாடகை வாகனங்களை புக் செய்ய முடியும் என்பதால் பயணிகள் பலரும் இந்த செயலிகளை பயன்படுத்தி புக் செய்வதையே விரும்புகிறார்கள்.
இந்த செயலியை பொறுத்தவரை பயணிகள் தங்கள் செல்லும் இடத்தை புக் செய்தால், எவ்வளவு தொகை என்பதை காட்டும் வசதி உள்ளது. பீக் நேரங்களில், புக்கிங் ஆவதில் நீண்ட நேரம் பிடிக்கும் நிலையும் உள்ளது. விரைவாக புக்கிங் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பயணிக்கும் முன்பாகவே கூடுதல் தொகையாக +10, +20, +30 என செலுத்தி வாகனங்களை புக் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை புக் செய்தால் பயண கட்டணமும் கூடுதல் ஆகும். வாகனங்கள் இயக்கும் கேப்டன்களுக்கும் கூடுதல் தொகை கிடைக்கும் என்பதால், டிப்ஸ் இல்லாமல் சாதாரண புக்கிங்கை கேப்டன்கள் எடுத்துக்கொள்ள மறுப்பதாக பயணிகள் பரவலாக குற்றம்சாட்டுகிறார்கள். இந்த சூழலில்தான், செயலிகளின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு செக் வைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- சில செயலிகள் பயணத்திற்கு முன்பே அட்வான்ஸ் டிப், ஆட் ஆன் என கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆப்ஷன்களை பயணிகளுக்கு காட்டுவதாக எங்கள் கவனத்திற்கு வந்தது. மோட்டார் வாகன சேவைக்கான வழிகாட்டுதல் படி 14.15 படி டிப்ஸ் என்பது பயணம் நிறைவடைந்த பிறகு விருப்பத்தின் அடிப்படையில் கொடுப்பதாகவே இருக்க வேண்டும்.
பயணம் செய்யும் முன்போ, புக்கிங் செய்யும் போதோ இந்த வசதியை காட்டக்கூட்டாது. எனவே செயலிகளில் இத்தகைய ஆப்ஷன்கள் காட்டக்கூடாது. செயலிகளின் இத்தகைய நடைமுறை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019- ஐ மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இதற்கு முன்பே, செயலிகளை மேற்கூறிய நடைமுறையை பின்பற்றக்கூடாது என்று கேட்டுக்கொண்டது. அனாலும், ரேபிடோ போன்ற செயலிகள் தொடர்ந்து பயணத்திற்கு முன்பே கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தது" என்றார்.

