சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுக 2 அணியாக பிரிந்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும், சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையில் இன்னொரு அணியாகவும் எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் முதல்வர் விஜய் அமைச்சர் பதவி வழங்காததால் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி அணி ஏமாற்றமடைந்தது. இந்நிலையில் தான் அதிமுகவில் பிளவுப்பட்ட 2 அணிகளும் மீண்டும் ஒன்றாக சேர பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுக இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 47 எம்எல்ஏக்களில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 எம்எல்ஏக்களும், எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்களும் செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தலில் தொடர் தோல்வியால் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று கூறினர். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் அணி முதல்வர் விஜய் சட்டசபையில் நம்பிக்கை கோரிய தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் விஜய் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இதை செய்ததாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறியது. ஆனால் தற்போது அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.
விஜய்யால் மாற்றம்
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி - சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி அணிகள் இடையே ஒன்றிணையும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாகி உள்ளது. நேற்றைய தினம் விஜய் தனது அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகான் ஆகியோரை அமைச்சராக்கினார். இதன்மூலம் முதல்வர் உள்பட 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். தமிழக அமைச்சரவையில் மொத்தம் 35 பேர் தான் இருக்க முடியும். இதனால் இனி தங்களுக்கு விஜய் அமைச்சரவையில் வாய்ப்பு இல்லை என்பதை சிவி சண்முகம் -எஸ்பி வேலுமணி தரப்பு அறிந்துள்ளது.
தொடங்கிய பேச்சுவார்த்தை
அதோடு நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் முதல்வர் விஜய்யை ஆதரித்தது தவறு என்று உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு விஜய்யை ஆதரித்ததால் சில எம்எல்ஏக்கள் தகுதி நீக்க பிரச்சனையை வேற எதிர்கொள்ள வேண்டி உள்ளதை நினைத்து வருந்தினர். இந்நிலையில் தான் தற்போது எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் அணியினர் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி உடன் சேர்ந்து செயல்பட தயாராகி உள்ளனர். இருதரப்பினர் இடையே சமரச பேச்சுவார்த்தைகள் தீவிரமாகி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி வைத்த டிமாண்ட்
இந்த பேச்சுவார்த்தையின்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும், சிவி சண்முகம் -எஸ்பி வேலுமணி தரப்பில் முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட புகாரை திரும்ப பெற வேண்டும் என்று சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி அணியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தேர்தல் சின்னங்கள் ஆணை, 1968, பிரிவு 15-இன் கீழ் அதிருப்தியாளர்கள் தேர்தல் ஆணையத்தில் மனு செய்தனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் பிளவு ஏற்படும்போது அதிருப்தியாளர்கள் குழு தேர்தல் ஆணையத்தை நாடி அதிகாரம் பெற முயற்சிக்கும். இதற்கு மனு செய்து தங்கள் தரப்பு ஆதரவாளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பார்கள். அந்த வகையில் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியின் முதல் படியாக இந்த மனு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தான் திரும்ப பெற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறியுள்ளது.
சிவி சண்முகம் தரப்பு டிமாண்ட்
மறுபுறம் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பினர், தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறினர். அதாவது முதல்வர் விஜய்யின் தவெகவிற்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்களித்த உடன் எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்களின் கட்சி பதவியை பறித்தார். பலரும் மாவட்ட செயலாளர் பதவியை இழந்தனர். இந்நிலையில் தான் பறிக்கப்பட்ட அனைத்து பதவிகளையும் மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது இந்த 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது பற்றி இருதரப்பும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனால் விரைவில் அதிமுகவில் 2 அணிகளும் ஒன்றிணைய உள்ளதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் எஸ்பி வேலுமணி பத்திரிகையாளர்களை சந்தித்தார. அப்போது அவர், ''அதிமுகவில் பிளவு இல்லை. கட்சியின் தேர்தல் செயல்பாடு குறித்து பழனிசாமி விவாதிக்க முன்வர வேண்டும். தவெக அமைச்சரவையில் அமைச்சராக பதவி பெற அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருப்பம் இல்லை'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

