சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி உள்ளது. தவெக ஆட்சி அமைந்த பின் நடக்கும் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு என்பதால் எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருக்கிறது.
தவெக ஆட்சி அமைந்து 100 நாட்களுக்குள் மொத்தமாக ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 3 மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இன்று முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு இந்த மாநாட்டை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வதாக சில விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் விஜய் ஆட்சியில் முதலீடுகள் குறைவாகவே ஈர்க்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தொழில்துறையில் தமிழ்நாடு 17வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக அதிர்ச்சி கொடுத்தார்.
திமுக ஆட்சியின் போது டாப்பில் இருந்த தொழில் முதலீடுகள், விஜய் ஆட்சிக்கு வந்த பின் சரிவை சந்திப்பதாக சில தரவுகளும் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வந்தார். குறிப்பாக ரீல்ஸ் போடுவது, பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது என்று சிக்கலில் சிக்கினார்.
அதுமட்டுமல்லாமல் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ட்விட்டர்கள் பதில்களை கூறியது, சட்டசபையில் ஓசூர் விமான நிலையத்தின் தேவை இருப்பதாகவும், அதனை வைத்தே தொழில் முதலீடுகள் வரும் என்று எதிர்க்கட்சிகள் பேசிய போது, அதற்கு ஆதாரம் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் கீர்த்தனா தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அதேபோல் விஜய் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனிடையே வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் முன்கூட்டியே வெளியிடப்படவில்லை. இதனால் அவசர கதியில் முறையான அறிவிப்பு இல்லாமல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவதாக தொழில்துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படியான சூழலில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி இருக்கிறது.
தவெக ஆட்சி அமைந்து 100 நாட்களுக்குள் மொத்தமாக ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1,21,788 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

