"காலணி வாங்க முடியாமல் வசதி வாய்ப்பு குறைந்த எம்எல்ஏ கூட இங்கு இருக்காங்க. லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமைய வேண்டும் என்றால் நமது உறுப்பினர்களை நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.
ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணி செய்வதற்கு வாகன வசதிகளை (கார்) ஏற்பாடு செய்து தர வேண்டும்சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஜோதிமணி சட்டசபையில் உருக்கமாக கோரிக்கை வைத்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடந்து வந்தது. நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர தயாராகி வருகிறது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் இன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு பாமக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதேவேளையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவுத் தெரிவித்தன. அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு ஒவ்வொரு கட்சியின் எம்எல்ஏக்களும் பேசினர். இந்த சமயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த காட்டுமன்னார்கோவில் தொகுதியின் எம்எல்ஏ ஜோதிமணி எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கார் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக விசிக எம்எல்ஏ ஜோதிமணி பேசுகையில், ''அனைவருக்கும் என்னுடைய முதற்கண் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். ஐயா இது என்னுடைய சொந்த கோரிக்கை. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான கோரிக்கை. இதனை உங்களிடம் முன்மொழிகிறேன். ஏற்கனவே இதுதொடர்பாக உங்களிடம் கடிதம் கொடுத்துள்ளேன்.
நான் 280 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தான் சட்டமன்றத்துக்கு வருகிறேன். பஸ், ரயில் உள்ளிட்டவற்றில் வருவதற்கு அலோவன்ஸ் கொடுக்கிறீர்கள். அது வேறு. ஆனால் வண்டி வாகனங்களில் (கார்) வர வேண்டும் என்றால் எனக்கு சொந்தமாக வாகனம் (கார்) கிடையாது. வாடகை வண்டியில் தான் வருகிறேன். என்னுடைய தொகுதி 40 கிலோமீட்டர் சுற்றளவை கொண்டுள்ளது. எல்லா இடத்துக்கும் சென்று மக்களை சந்தித்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்றால் அதற்கு வாகன வசதி இல்லை.
2வது, ஒரு செயலாளரை கையில் வைத்து கொண்டு பணி செய்யும் வகையில் வசதி இல்லை. இப்படித்தான் முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் வாகன வசதி (கார் வசதி) செய்து கொடுக்க வேண்டும்.
காலணி வாங்கி அணிய முடியாமல் வாய்ப்பு வசதி குறைவான எம்எல்ஏ கூட இங்க இருக்காங்க.
லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமைய வேண்டும் என்றால் நமது உறுப்பினர்களை நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணி செய்வதற்கு வாகன வசதிகளை (கார்) ஏற்பாடு செய்து தர வேண்டும்'' என்றார். இதை கேட்டதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், இந்த கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தற்போது கார் கேட்டுள்ள ஜோதிமணி திடீர் லக்கில் விசிகவில் எம்எல்ஏவானார் . அவர் வென்றுள்ள காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விசிக சார்பில் சிந்தனை செல்வன் எம்எல்ஏவாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்தார். ஆனால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை. காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நேரடியாக தானே போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார். அதன்பிறகு அவர் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றார்.
இதையடுத்து தான் ஜோதிமணி காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் விசிக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். விசிகவில் இல்லாத நிலையில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினார் திருமாவளவன். இதற்கு முக்கிய காரணம் ஜோதிமணியின் குடும்ப பின்னணி.
ஜோதிமணியின் தந்தை பெயர் இளையபெருமாள். இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீண்டகாலம் போராடியவர். அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டின் முதல் தலைவராக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவுவும் இருந்தார். ஒருமுறை எம்எல்ஏவாகவும், 4 முறை எம்பியாகவும் இருந்தார். இதனால் தான் அவரது மகனான 71 வயதான ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை முடித்த ஜோதிமணி தற்போது முதல் முறையாக எம்எல்ஏவாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

