வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும், இதற்கான தகுதி வரம்புகள் அடங்கிய அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். அதில் முக்கியமான ஒன்று வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4000 வழங்கும் திட்டம். இளைஞர்கள் பலர் படித்துவிட்டு நமது தமிழகத்தில் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். படித்து முடித்த அவர்கள் வேலை தேடும் காலத்தில் வீட்டின் உதவியை எதிர்பார்க்காமல் அவர்களின் செலவை அவர்கள் பார்த்துக்கொள்ளும் நோக்கில் இத்திட்டத்தை தவெக அறிவித்தது.
இந்நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் இளைஞர்களுக்கு ரூ. 4000 கொடுக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோசப் விஜய் கடந்த மே 10 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். இன்றுடன் தவெக அரசு ஆட்சிக்கு வந்து சரியாக ஒரு மாத காலம் ஆகிவிட்டது.
200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதி கொடுத்த நிலையில், அத்திட்டத்தில் கையெழுத்திட்டு அதனை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றினார். விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர்க்கடன் ரத்து பல்வேறு ஸ்லாப்கள் நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் பாதிகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை வாக்குறுதியை நேற்று தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். முதலமைச்சர் விஜய் கொடுத்த மகளிருக்கு ரூ. 2500 என்ற வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. அது வழக்கம்போல் ரூ. 1000 மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்ததாக இளைஞர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முதலமைச்சர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்ததாக வேலையில்லாத இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தற்போது ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான தகவலை அமைச்சர் முகமது பர்வேஸ் பகிர்ந்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான (ITI) மாணவர் சேர்க்கை மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக விரிவான ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்திற்கான தகுதி வரம்புகள், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த முழு விவரம் விரைவில் அரசாணையாக வெளியாகும் என அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

