வெள்ளை எள், ஆளி விதை மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை அரைத்து மாவாக்கி அல்வா பதத்தில் கிளறி சாப்பிட்டால் நல்லது என்று அறிந்தேன்.
களமிறங்கினேன்.
வெள்ளை எள், ஆளி விதை மற்றும் பாதாம் பருப்பு தலா 25 கிராம் எடுத்து தனித்தனியாக வறுத்து சூடு ஆறியதும் பொடியாக்கி வைத்துக்கொண்டேன். இதற்கிடையே 75 கிராம் நாட்டு சர்க்கரையை நீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் இந்த 3 தானியப் பொடியை (வெள்ளை எள், ஆளி விதை, பாதாம் பருப்பு) அதில் கொட்டி கிளறினேன்.
அல்வா பதத்துக்கு வரும்போது சிறிது நெய் விட்டு அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியதும் சாப்பிட சுவையோ சுவை. குடும்பமே சாப்பிட்டது. நண்பர்கள் சிலருக்கும் கொடுத்தேன். வித்தியாசமான சுவையாக இருந்ததாகச் சொன்னார்கள். குறிப்பாக இந்த அல்வா மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் சோர்வாக இருப்பவர்கள் இதைச் செய்து சாப்பிட்டால் தாது பலத்தைத் தரும்.
வெள்ளை எள், ஆளி விதை மற்றும் பாதாம் பருப்பு ஆகிய மூன்றில் ஏராளமான சத்துகள் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்.
எள்ளில் பொதுவாக இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் முடி தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்ய உதவும். இளநரை, முடி கொட்டுதல், செம்பட்டை முடி, நுனி முடி வெடிப்பு போன்ற பிரச்சினைகளை சரிசெய்யக்கூடியது. ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது. கால்சியம் சத்து இருப்பதால் மூட்டு வலியை குணப்படுத்த உதவுகிறது. மேலும் குறிப்பாக எலும்புத் தேய்மானம் ஏற்படாமல் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
ஹார்மோன் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு பிரச்சினை மற்றும் மன உளைச்சலைப்போக்கக்கூடியது ஆளி விதை.
மாதவிடாய்க்கோளாறுகளை சரிசெய்வதுடன் அந்த நேரத்தில் வரக்கூடிய வயிற்றுவலி, தலைவலி மற்றும் பதற்றத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது. மேலும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதுடன் ஆண், பெண் என அனைவருக்கும் குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். கர்ப்பப்பை செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியது.
அடுத்தது பாதாம்... ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பாதாமில் வைட்டமின் பி மற்றும் போலிக் ஆசிட் உள்ளது. இதனால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும். தலைமுடியை பாதுகாப்பதுடன் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல நன்மைகளை தரக்கூடியது. மூளையை பலப்படுத்துவதுடன் முக சுருக்கங்களைப் போக்கக்கூடியது. மலச்சிக்கல், ரத்தசோகை என பல பிரச்சினைகளை சரிசெய்யக்கூடியது. கால்சியம் இருப்பதால் எலும்பு மற்றும் மூட்டு வலியை போக்கக்கூடியது.

