Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இது எங்கள் குழந்தையே இல்லை!" - IVF மருத்துவமனைகளின் பகீர் மோசடி!

"இது எங்கள் குழந்தையே இல்லை!" - IVF மருத்துவமனைகளின் பகீர் மோசடி!

Kalki Online 2 months ago

ன்றைய மருத்துவ உலகில், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு வரப்பிரசாதமாகத் திகழ்வது IVF சிகிச்சை (Assisted Reproductive Technology) தொழில்நுட்பம்.

ஆனால், இந்தத் துறையில் நடக்கும் சில பேராசை மற்றும் கவனக்குறைவு நடவடிக்கைகள், ஒரு தம்பதியின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது. அதற்குச் சாட்சிதான், அண்மையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய குருகுராமத்தைச் சேர்ந்த தம்பதியரின் வழக்கு.

கனவோடு சென்ற தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்

ஹரியானா மாநிலம், குருகுராமத்தைச் சேர்ந்த ராகுல் ரத்தோர் மற்றும் மீனு ரத்தோர்தம்பதியினர், குழந்தை பாக்கியத்திற்காக டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஃபர்டிலிட்டி மருத்துவமனையை அணுகினர். தங்களின் சொந்த விந்தணு மற்றும் கருமுட்டையைப் பயன்படுத்தி (Own Genetic Material) மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இதற்காகச் சுமார் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, பல வலிகளைத் தாங்கி, தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

அதன்பின், கடந்த ஜனவரி 2026-ல் மீனு ரத்தோருக்கு அழகான இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. ஆண்டுகள் கடந்த ஏக்கம் தீர்ந்த மகிழ்ச்சியில் இருந்த தம்பதியினருக்கு, சில நாட்களில் ஒரு சந்தேகம் எழுந்தது. குழந்தைகளின் முக அமைப்பு மற்றும் சில உடலியல் கூறுகள், தங்களது குடும்பத்தில் யாருடனும் ஒத்துப்போகவில்லை.

சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, ராகுல் ரத்தோர் தம்பதியினர் தங்களின் குழந்தைகளுக்கு DNA (மரபணு) சோதனை செய்தனர். அந்த முடிவுகள் அவர்களின் தலையில் இடி போல் இறங்கின. பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும், பெற்றோர் இருவருக்குமே 0% (பூஜ்யம்) மரபணுப் பொருத்தம் இருந்தது. அதாவது, அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகள், உயிரியல் ரீதியாக (Biologically) அவர்களுக்குப் பிறக்கவே இல்லை!

இதன் மூலம், தம்பதியருக்குத் தெரியாமல் மருத்துவமனை நிர்வாகம் வேறொரு டோனரின் (Donor) முட்டையையோ அல்லது கருவையோ மாற்றியிருப்பது வெட்டவெளிச்சமானது. "எங்கள் சொந்த இரத்தத்தில் உருவான குழந்தைகள் எங்கே? அவர்களை மருத்துவமனை நிர்வாகம் விலைக்கு விற்றுவிட்டதா?" என்ற அலறலோடு இந்தத் தம்பதி சட்டத்தின் கதவுகளைத் தட்டினர்.

ஆஸ்பத்திரி கௌரவத்தை மறைக்கப் பின்னப்பட்ட சதிவலைகள்:

இந்த மோசடியை மருத்துவமனை நிர்வாகத்திடம் தம்பதியினர் முறையிட்டபோது, அங்குதான் அதிகாரமும், கார்ப்பரேட் தந்திரங்களும் அரங்கேறத் தொடங்கின:

இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் மருத்துவமனையின் கௌரவம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகம் பாதிக்கப்படும் என்பதால், வழக்கை மூடி மறைக்கத் தம்பதியருக்குப் பல கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் உடன்படாததால், கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன

சட்டத்தின் முட்டுக்கட்டையும் 'Stay' உத்தரவும்:

காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினரிடம் மூன்று மாதங்கள் அலைந்தும் செல்வாக்கு மிக்க அந்த மருத்துவமனை மீது FIR பதியப்படவில்லை. இறுதியில், டெல்லி சாக்கெட் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவிற்குப் பிறகே, ஜூன் 5-ஆம் தேதி FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தங்களின் கௌரவத்தைக் காக்க உடனடியாக நீதிமன்றத்தை நாடி, மறுநாளே இந்த வழக்கின் போலீஸ் விசாரணைக்குத் தற்காலிகத் தடை (Stay) வாங்கியுள்ளது.

இந்தியாவின் ART (Assisted Reproductive Technology) சட்டத்தில், இதுபோன்ற லேப் குளறுபடிகள் நடக்கும்போது எடுக்க வேண்டிய உடனடி குற்றவியல் நடவடிக்கைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் (Clear Guidelines) இல்லாததை மருத்துவமனைகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

இது ஒரு சிவில் வழக்கல்ல... அப்பட்டமான 'Criminal Case'!

பல மருத்துவமனைகள் இதை ஒரு தவறு (Medical Negligence அல்லது Embryo Mix-up) என்று கூறி கடந்து செல்லப் பார்க்கின்றன. ஆனால், உண்மையில் இது தம்பதியரின் அனுமதியின்றி அவர்களின் உடலுக்குள் அன்னிய அணுக்களைச் செலுத்திய மனித உரிமை மீறல்.

போலியான ஆவணங்களையும், ஒப்புதல் படிவங்களையும் தயாரித்த ஃபோர்ஜரி (Forgery) குற்றவியல் நடவடிக்கை.

பெற்றோரின் சொந்தக் குழந்தையைத் திருடி அல்லது கடத்தி வேறொருவருக்கு விற்றிருக்கக்கூடிய குழந்தை கடத்தல் (Child Trafficking) சார்ந்த கடுமையான 'Criminal Case' ஆகும்.

இதற்குத் துணையாக இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு, ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான சிறைத்தண்டனையும், உரிம ரத்தும், பல லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.

ஆண் குழந்தைகளுக்கு விரைப்பை வலி: உதாசீனப்படுத்தினால் வரும் ஆபத்து!

விழிப்புணர்வு செய்தி: குழந்தை பிறந்தவுடனே DNA டெஸ்ட் முக்கியமா?

 DNA | IVF சிகிச்சை

இந்தக் கதை நமக்குக் கற்பிக்கும் மிக முக்கியமான பாடம் ஒன்றுதான் - விழிப்புணர்வு மட்டுமே உங்களைக் காக்கும்!

இன்றைய வணிகமயமாக்கப்பட்ட IVF சிகிச்சை சூழலில், தம்பதியினர் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை தங்களின் சொந்த இரத்தம்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது இன்றியமையாததாகிவிட்டது.

எனவே DNA சோதனை கட்டாயம்:

IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தம்பதியினர், குழந்தை பிறந்த உடனேயே தங்களின் சுய திருப்திக்காகவும், பிற்காலப் பாதுகாப்புக்காகவும் ஒரு முறை DNA (Maternity & Paternity) பரிசோதனை செய்து கொடுத்துத் தெளிவு பெறுவது மிகவும் நல்லது.

ராகுல் ரத்தோர் கூறியது போல, "நான் 6 லட்சம் செலவு செய்து, இத்தனை வலிகளை அனுபவித்திருக்கிறேன். சந்தேகம் வரும்போது அதைச் சோதித்துப் பார்ப்பது என் உரிமை, என் விழிப்புணர்வு!"

உங்கள் குழந்தை இரவில் மூச்சு விட சிரமப்படுகிறதா? இதோ மருத்துவரின் எச்சரிக்கை!

பெற்றோர்களே! எந்த ஒரு ஃபர்டிலிட்டி சென்டருக்குச் சென்றாலும் ஆவணங்களை முழுமையாகப் படியுங்கள். லேப் நம்பகத்தன்மையைச் சோதியுங்கள். சந்தேகமிருந்தால் தயங்காமல் மருத்துவரிடம் கேள்வி கேளுங்கள். மருத்துவ உலகிற்குப் பின்னால் இருக்கும் கறுப்புப் பக்கங்களை நாம் விழிப்புணர்வோடு மட்டுமே எதிர்கொள்ள முடியும்!

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online