Dailyhunt
காட்டேரி அம்மன் உருவான கதை தெரியுமா?

காட்டேரி அம்மன் உருவான கதை தெரியுமா?

Kalki Online 1 year ago

காட்டேரி அம்மன் பார்வதி தேவியின் வடிவமாகக் கருதப்படுகிறார். அவர் நகரத்தின் காவல் தெய்வமாக இருக்கிறார்.

காட்டேரி அம்மன் உருவான கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு சமயம் பரமசிவனும், பார்வதி தேவியும் தூங்கச் சென்றனர். பரமசிவன் நன்றாகத் தூங்கிவிட்டார். அவர் தூங்கிய பிறகு எப்போதும் கிளம்புவது போல பார்வதி தேவி கிளம்பி சென்று விட்டார். அன்று மட்டும் தற்செயலாக பரமசிவன் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டார்.

பரமசிவன் சுற்றும் முற்றும் பார்த்தார், பார்வதி தேவியை காணவில்லை. அவரைத் தேடிப்பார்த்துவிட்டு பரமசிவன் மீண்டும் தூங்கிப்போனார். தனது வேலையை முடித்துக்கொண்ட பார்வதி தேவி ஒன்றும் தெரியாதது போல பரமசிவன் அருகில் வந்து படுத்துக்கொண்டார்.

மகா கும்பமேளா பற்றிய அரிய தகவல்கள்!

'இரவு எங்கே சென்றாய்?' என்று பரமசிவன் பார்வதி தேவியிடம் கேட்க, 'எனக்குத் தூக்கம் வரவில்லை. அதனால் உலாவி விட்டு வந்தேன்' என்றார். அதற்கு மேல் பரமசிவன் எதுவும் கேட்கவில்லை. மறுநாள் இரவு பரமசிவனுக்கு தூக்கம் வரவில்லை. நடு இரவில் பார்வதி தேவி வழக்கம் போல் கிளம்பினாள். அவளுக்குத் தெரியாமல் பரமசிவன் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.

பார்வதி தேவி சுடுகாட்டிற்குச் சென்று விகாரமான உருவம் எடுத்து, அங்கிருக்கும் பிணங்களை எடுத்துச் சாப்பிட்டாள். இதைப் பார்த்த சிவபெருமான் அதிர்ச்சியடைந்தார். இதற்காகத்தான் பார்வதி தேவி தினமும் வருகிறார் என்பதை உறுதி செய்துக்கொண்டு வீடு திரும்பினார்.

பார்வதி தேவியின் இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு திட்டம் போட்டார் சிவபெருமான். பார்வதி தேவி செல்லும் சுடுகாட்டு வழியில் அகலமாகவும், ஆழமாகவும் ஒரு குழியைத் தோண்டினார். அதன் மீது தழைகளைப் போட்டு மூடிவிட்டு வந்தார்.

உடல் நலக் குறைபாட்டுக்கு வழிவகுக்கும் மறைக்கப்பட்ட சர்க்கரையுள்ள 5 உணவுகள்!

அன்றைய தினமும் நள்ளிரவு வந்தது. பார்வதி தேவி சுடுகாட்டிற்குப் புறப்பட்டார். சிவபெருமானும் அவரைப் பின்தொடர்ந்தார். மிகவும் ஆர்வமாக சென்ற பார்வதி தேவி அங்கிருந்த குழியில் விழுந்தார். பின்னாடியே சிவபெருமான் வந்து நிற்பதை பார்த்த பார்வதி தேவி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு சிவபெருமான், 'உன்னை என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

உன்னில் இருக்கும் ராட்சஸ குணத்தை விட்டுவிட்டு வந்தால் மட்டுமே உன்னை ஏற்றுக்கொள்வேன்' என்று கூறினார். 'அப்படியே செய்கிறேன். இந்தக் குழியிலேயே அந்த ராட்சஸ குணத்தை விட்டு வருகிறேன். என்னை வணங்குபவருக்கு நான் நல்லதே செய்வேன்' என்றார் பார்வதி தேவி. குழியில் இருந்து வெளியே வந்ததும் அந்தக் குழியை மூடினார் சிவபெருமான். இன்றும் புதையுண்ட பார்வதி தேவியின் சக்தி பூமிக்கடியில் உள்ளதாக நம்பப்படுகிறது. அந்தக் காட்டேரியம்மனே காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிபடப்படுகிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online