Dailyhunt
சிறுவர் சிறுகதை: முத்தான 2  முல்லா கதைகள்

சிறுவர் சிறுகதை: முத்தான 2 முல்லா கதைகள்

Kalki Online 8 months ago

கதை 1:

பாதுஷாவிடம் முல்லாவிற்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. முக்கியமான விஷயங்களில் முல்லாவிடம் ஆலோசனையும் கேட்பது வழக்கம்.

இதனால் பாதுஷாவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சிலர் கூட முல்லாவின் மீது கோபத்தில் இருந்தனர். சமயம் கிடைக்கும் போது முல்லாவை பழி வாங்க வேண்டும் என்று காத்திருந்தார்கள்.

ஒரு முறை பாதுஷா முல்லாவிற்கு விருது ஒன்றை வழங்கத் தீர்மானித்து, அரசவையைக் கூட்டி அமைச்சர்களிடம் கருத்து கேட்டார்.

முல்லாவின் மீது வெறுப்பில் இருந்த சிலர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினர்.

"நீங்கள் நினைக்கும் அளவிற்கு முல்லா ஒன்றும் பெரிய திறமைசாலி அல்ல. அவர் சாதாரண மனிதர்களைப் போலவே பேசுகிறார். சாதாரண மனிதர்கள் செய்யக் கூடிய செயல்களையே செய்து வருகிறார். அவரிடம் மனித இயல்பிற்கு மீறிய எந்த ஒரு விசேஷ திறமையும் இல்லை. எனவே, அவர் விருதுக்குத் தகுதியானவர் இல்லை" என்றார்கள்.

பலர் இக்கருத்தை ஆமோதித்தார்கள். அப்போது முல்லா சபைக்குள் வந்து கொண்டிருந்தார். உடனே அவர் தன் சமயோசித புத்தியை உபயோகித்து, கீழே உட்கார்ந்து தன் கைகளையும் கால்களையும் உபயோகித்து விலங்கு போல நடக்கத் தொடங்கி சபைக்குள் வந்தார்.

 Mulla in Royal court

"முல்லா! எதற்காக விலங்கு போல நடந்து வருகிறீர்கள்? உனக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார் பாதுஷா.

முல்லா எதையோ உணர்த்த விரும்புகிறார் என்பதை பாதுஷா புரிந்து கொண்டார். எனவே, பாதுஷா முல்லாவிடம் இவ்வாறு கேட்டார்.

முல்லா எழுந்து பாதுஷாவின் முன்னால் நின்று வணக்கம் தெரிவித்தார்.

"பாதுஷா அவர்களே! நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் அசாதாரணமான விஷயம் எதையும் செய்ய முடியாது என்று இங்கிருந்த சிலர் வருத்தப்பட்டார்கள். அதனால்தான் நான் மனித இயல்புக்கு அப்பாற்பட்டு ஒரு விலங்கு போல நடந்து என் திறமையை நிரூபித்தேன். இனி அவர்கள் என் திறமையைப் பற்றி சந்தேகிக்க மாட்டார்கள்" என்றார் முல்லா.

முல்லாவைப் பற்றி குறை கூறியவர்கள் அமைதியாக நின்றார்கள்.

 Mulla with a poor family

கதை 2:

மற்றொரு முல்லா கதையினை இப்போது பார்ப்போம்.

ஒரு சமயம் முல்லா தெரு ஒன்றின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு சிறிய வீட்டை அவர் கடந்த போது அந்த வீட்டிற்குள் சத்தம் கேட்டது. அந்த வீட்டில் ஒரு ஏழைப் பெண்ணும் அவளுடைய மகனும் வசித்து வந்தனர். இருவரும் ஏதோ வேகமாக பேசிக் கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு முல்லா அந்த வீட்டிற்குள் நுழைந்தார்.

அந்த பெண்ணை முல்லாவிற்கு நன்றாகத் தெரியும். மிகவும் ஏழ்மையானவள். தையல் வேலைகளைச் செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.

முல்லா அந்த பெண்ணிடம் என்ன பிரச்னை என்று விசாரித்தார்.

"ஐயா! இவன் பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். இவனை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவனுக்கு இது புரியவில்லை. நீங்கள் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கள்" என்றாள் அந்தப் பெண்.

முல்லா அந்த சிறுவனை தன்னிடம் அழைத்தார்.

"தம்பி! நீ பள்ளிக்கூடம் போக வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். அப்போதுதான் உன் எதிர்காலம் சிறப்பாக அமையும்" என்றார்.

சிறுவர் சிறுகதை: பொறுத்தார் பூமி ஆள்வார்

ஆனால், அந்த சிறுவனோ முல்லா சொன்னதைக் கேட்கத் தயாராய் இல்லை. அவரிடம் பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று தீர்மானமாய்ச் சொன்னான்.

முல்லா அவனை வேறுவிதமாய்த் திருத்த முடிவு செய்து, ஏழைப் பெண்மணி தைப்பதற்காக வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்றை எடுத்து அதை கிழித்துப் போட்டார். இதைக் கண்ட தாயும் மகனும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அந்த பையன் தன் தாயிடம் "அம்மா! முல்லா நம்முடைய விலை உயர்ந்த துணியை கிழித்து வீணாக்கி விட்டாரே" என்று சொன்னான்.

"தம்பி! பள்ளிக்குப் போகமாட்டேன் என்று உன் சிறப்பான எதிர்காலத்தையே நீ வீணாக்கிக் கொண்டிருக்கிறாய். இந்த விலை உயர்ந்த துணி வீணானது அதைவிட பெரிய விஷயமா என்ன?" என்றார் முல்லா.

காட்டிலே மராத்தான் ஓடும் மான்... இருப்பினும் சிறுத்தைக்கு இரையாவது எப்படி?

முல்லா கூறிய இந்த வார்த்தைகள் அந்த சிறுவனின் உள்ளத்தைத் தைத்தன. தன் தவறை உணர்ந்தான். உடனே "நான் பள்ளிக்கூடம் போகிறேன்" என்று சொல்லி புறப்பட்டான்.

முல்லா, தான் கிழித்த அந்த விலை உயர்ந்த துணிக்கான பணத்தை அந்த ஏழைப் பெண்ணுக்குக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online