நொய்டாவைச் சேர்ந்த தீபக் என்ற பயணி உபேர் ஆட்டோ மூலம் பயணம் மேற்கொண்டதற்கான கட்டணம் ரூ.7.66 கோடி வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மிக சிறிய தூரம் பயணிக்க உபேர் ஆட்டோ முன்பதிவு செய்து பயணித்துள்ளார் நொய்டாவைச் சேர்ந்த தீபக். பயணத்துக்கு முன்பு தோராயமாக ரூ. 60 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை ஆட்டோ கட்டணமாக செலுத்துவோம் என்று தீபக் எதிர்பார்த்திருந்தார். எனினும், ரைடை நிறைவு செய்த தீபக் தனக்கு வந்த கட்டணத்தை பார்த்து அதிர்ந்தார்.
பயணத்துக்குப் பின் அவர் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.7 கோடியே 66 லட்சம் என்று உபேர் செயலியில் காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த தீபக் அதிர்ச்சி அடைந்ததோடு, சம்பவம் தொடர்பாக வீடியோவையும் பதிவு செய்துள்ளார். வீடியோவின்படி தீபக் மேற்கொண்ட பயணத்துக்கான கட்டணம் ரூ. 1 கோடியே 67 லட்சத்து 74,647 என்றும் காத்திருப்பு கட்டணம் ரூ. 5 கோடியே 99 லட்சத்து 9,189 என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இவை தவிர விளம்பரக் கட்டணமாக ரூ. 75 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர் காத்திருக்கவில்லை எனினும், அதற்கான கட்டணம் சேர்க்கப்பட்டு இருப்பதாக தீபக் கூறுகிறார். அதிசயிக்கும் வகையில் இந்தக் கட்டணத்தில் ஜி.எஸ்.டி. வரி எதுவும் சேர்க்கப்படாமல் இருந்துள்ளது.
இதுவரை தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை எண்ணியதே இல்லை என்றும் "சந்திரயான் முன்பதிவு செய்திருந்தால்கூட, அந்த சவாரிக்கு இவ்வளவு செலவாகியிருக்காது" என்றும் தீபக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ வைரல் ஆன நிலையில், உபெர் இந்தியா சார்பில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி இனிப்புக் கஞ்சி

