நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை துரைப்பாக்கத்தில் இன்று (மார்ச் 23) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சியின் 20 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 20 பெண் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியில் சீமான் பேசியபோது, "அரை விழுக்காடு, கால் விழுக்காடு வாக்கு சதவிகிதம் வைத்தவர்களுக்கெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் உடனடியாக சின்னம் கிடைக்கிறது. அவர்களுக்கெல்லாம் பல கோடிகள் கொடுக்கிறார்கள். அப்போது என்னிடம் எவ்வளவு பேரம் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
எங்கே இனிப்பு இருக்கிறதோ அங்கே ஈயும் எறும்பும் தானாக வரும். எங்கே நேர்மை இருக்கிறதோ அங்கே மக்கள் தானாக வருவார்கள்.
என் மக்கள் என் சின்னத்தை தேட மாட்டார்கள். என் எண்ணத்தை தான் கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள். களத்தில் நிற்பது கேடுகெட்ட பணநாயகத்தை ஒழித்து மாண்புமிக்க ஜனநாயகத்தை காப்பதற்காக தான்.
சின்னம் வைத்திருக்கிற கட்சிகளை விட சின்னமே இல்லாத எதுவென்றே தெரியாத கட்சி துடிப்போடும் வெறியோடும் களத்தில் நிற்கும்.
நம்பிக்கையோடு களத்தில் நில்லுங்கள். முடியாது என்பது முட்டாள்களின் அகராதி. போதைப்பொருள் விற்றவர்கள், லாட்டரி விற்றவர்கள் காசில் தான் கட்சி நடத்துகிறார்கள்.
ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்ற காங்கிரஸ் கட்சியுடன் ஏன் திமுக கூட்டணி வைத்தார்கள். அவர்களுக்கு ஏன் 10 சீட் ஒதுக்கினார்கள்? அவர்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்க முடியாது என்று திமுக முடிவெடுத்திருக்க வேண்டும்.
ஒரே ஒரு முறை எனக்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சியை கொடுத்து பாருங்கள். 10 வருடத்திற்கு முன்பே எனக்கு கொடுத்திருக்கலாம் என்று நீங்கள் வருந்துவீர்கள்.
சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என்று விமர்சனம் செய்கிறார்கள். என் வீட்டில் சுவிட்ச் போட்டால் என் வீட்டில் தான் விளக்கு எரியும்.
திமுகவுக்கு வாக்களித்தால் தான் பாஜக வரும். உண்மையில் பாஜகவின் பி டீம் அவர்கள் தான். புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்றார்கள். ஆனால், பிரதமர் ஸ்ரீபள்ளியை தமிழகத்தில் நடத்த ஒப்புதல் பெற்றுள்ளார்கள்" என்று தெரிவித்தார்.
செல்வம்
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!

