தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (மே 27) தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு, இரு நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி சென்ற முதல்வர் விஜய்க்கு, தில்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்குச் சென்ற விஜய்க்கு, தில்லி திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் சம்பிரதாயப்படி அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் முதல்வர் விஜய் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். முதலமைச்சராக பதவியேற்ற பின் ஜோசப் விஜய் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் ஜோசப் விஜய் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தமிழகத்திற்கான நிலுவை நிதி, புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பொதுநலத் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவைக் கோருவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தற்போது பிரதமரைச் சந்தித்திருப்பது இந்திய அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

