கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் மற்றும் வாத்துகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக எல்லையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லைகளிலும் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்திற்குள் கோழி, வாத்து, முட்டை போன்றவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து உள்ளே வரும் மற்ற வாகனங்களிலும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ள நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள்,
"நீலகிரி எல்லையில் கேரளாவுக்கு செல்லும் எட்டு சாலைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் கால்நடை மருத்துவர், ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுட்டு வருகின்றனர்.
இதற்காக எட்டு சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளித்த பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
கோழி, வாத்து போன்ற பறவை இனங்கள், அவற்றின் எச்சம் மற்றும் கழிவுகளையும் கொண்டு வர அனுமதி இல்லை. பறவைக் காய்ச்சல் கிருமிகள் 90 நாட்களுக்குப் பிறகுதான் முழுமையாக அழியும் என்பதால், இந்தக் கண்காணிப்பு பணிகள் 90 நாட்களுக்குத் தொடரும். அதே நேரத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தால் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கலர் காஜா ரோல்
வெயில் நிவாரணம் வருமா? அப்டேட் குமாரு

