2023-ல் கூகுளில் இந்திய அளவில் அதிகமாகத் தேடப்பட்ட உணவுப் பொருட்கள் செய்முறையின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது ஆவக்காய் ஊறுகாய்.
ஆந்திர உணவகங்களில் ஸ்பெஷலாகப் பரிமாறப்படும் இந்த ஆவக்காய் ஊறுகாயை நீங்களும் செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
மாங்காய் - அரை கிலோ
கடுகு - 30 கிராம் (3 டேபிள்ஸ்பூன்)
காய்ந்த மிளகாய் - 30 கிராம் (20)
வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெள்ளைக் கொண்டைக்கடலை - 3 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 100 மில்லி
உப்பு - 4 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
மாங்காயைக் கழுவி தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை எடுத்துவிடவும்). வெறும் வாணலியில் பாதியளவு வெந்தயத்தைச் சேர்த்து வறுத்து அரைத்தெடுக்கவும். காய்ந்த மிளகாய், கடுகை வெயிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஜாடியில் வெந்தயப்பொடி, மிளகாய் - கடுகுப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் மீதமுள்ள வெந்தயம், வெள்ளைக் கொண்டைக்கடலை, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதை வெயிலில் மூன்று நாள்கள் வைக்கவும். தினமும் ஊறுகாயைக் கிளறிவிடவும். அப்போதுதான் மாங்காய் நன்றாக மசாலாவுடன் கலந்து ஊறும். 10 நாள்கள் ஊறிய பிறகு பயன்படுத்தலாம்.

