நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் தமிழக சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும்நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குகள் மே 4ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கடைசி தேதி ஏப்ரல் 6, 2026 ஆகும்.
இந்நிலையில், திமுக சார்பில் மாநகராட்சி மேயர்களில் நான்கு பேர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ஆர். மகேஷ் கன்னியாகுமரி தொகுதியிலும், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஓசூர் தொகுதியிலும்,
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திருப்பூர் தெற்கு தொகுதியிலும்,
தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் தஞ்சை தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
இவர்களில், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் ஒப்படைத்தார்.
திமுகவின் இந்த முடிவு, கட்சியின் வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் பெற்ற மேயர்களை சட்டமன்றத் தேர்தல் களத்தில் இறக்கும் உத்தியாக பார்க்கப்படுகிறது.

