அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஓரிரு நாட்களுக்கு முன்பு வரை உறுதியாக இருந்த நிலையில்… 17ஆம் தேதி மாலை பாமகவின் சட்டமன்ற உறுப்பினர் அருள், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியை சந்தித்து பேசினார்.
ஆனால் அடுத்த நாளான மார்ச் 18ஆம் தேதியே தைலாபுரத்தில்உயர்மட்ட குழுவை கூட்டி பாஜகவோடு கூட்டணி என்று முடிவு எடுத்து விட்டது பாமக.
இன்று பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக ஒப்பந்தமும் கையெழுத்தாகி… சேலம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் மேடை ஏறுகிறார்கள்.
இந்த நிலையில் அதிமுகவுடன் மூன்று சுற்று வரை பேச்சுவார்த்தை நடத்திய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிலைப்பாடு பற்றி இன்னமும் தெளிவான தகவல் இல்லை.
பாமக கைநழுவி போய்விட்ட நிலையில் தேமுதிகவையாவது கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது அதிமுக.
ஆனால் பாமக- பாஜக கூட்டணி முடிவான நேற்று மாலையில் இருந்து, தேமுதிக நிர்வாகிகளை அதிமுகவினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை ஒரே அணியில் போட்டியிட்டன. அதேபோன்ற அணியை 2024 இலும் அமைக்க வேண்டும் என்ற முனைப்பில், இப்போது பாமகவை அடுத்து தேமுதிக பக்கமும் பாரதிய ஜனதா கட்சியின் கவனம் திரும்பி இருக்கிறது.
இந்த நிலையில் தான் அதிமுகவிற்கு நாட் ரீச்சபிள் ஆகிவிட்டார்கள் தேமுதிக நிர்வாகிகள்.
இன்று முதல் 40 தொகுதிகளுக்கும் தேமுதிகவினர் விருப்ப மனு கொடுக்கலாம் என்று ஏற்கனவே அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்திருக்கிற நிலையில்… பாமகவின் முடிவை அடுத்து, அதிமுகவிடம் தனது டிமாண்டை தேமுதிக அதிகரிக்கும் என்று தெரிகிறது.
தேமுதிகவை எப்படியாவது கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக முயற்சிக்கிறது.
பாமகவை போலவே கடைசி நேரத்தில் தேமுதிகவையும் தட்டித் தூக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
வேந்தன்
தமிழிசை ராஜினாமா ஏற்பு: தெலங்கானா புதுச்சேரிக்கு புதிய ஆளுநர் யார்?
GOLD RATE: உச்சம் தொட்ட தங்கம்… கதி கலங்கும் வாடிக்கையாளர்கள்!

