தமிழ் சினிமாவில் பலருக்கும் பேவரைட் ஆன ரியல் ஜோடி என்றால் அது சூர்யாவும், ஜோதிகாவும் தான். இருவரும் தங்கள் கேரியரில் சிறந்து விளங்கிய போது திருமணம் செய்து கொண்டனர்.
இல்லற வாழ்க்கையில் மட்டுமல்லாது இருவரும் சினிமா உலகிலும் சாதித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தியா, தேவ் என்று இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்த ஜோதிகா சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நடிக்க வந்தார். தற்பொழுது இருவரும் பிசியாக வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர்.

ஜெய் பீம், சூரரைப் போற்று என அடுத்தடுத்து ஹிட்களை கொடுத்த சூர்யா யாருமே எதிர்பார்க்காத வண்ணம் 'விக்ரம்' படத்தில் வில்லனாக தோன்றி மிரட்டினார். அதனைத் தொடர்ந்து முற்றிலும் வித்தியாசமான லுக்கில் 'கங்குவா' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதேபோல நடிகை ஜோதிகாவும் மலையாளத்தில் காதல் டு தி கோர், ஹிந்தியில் 'சைத்தான்' போன்ற பிற மொழி திரைப்படங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜோதிகாவிடம் அவரது மகன் தேவ் சினிமாவில் களமிறங்குகிறாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் "நிச்சயமாக இப்பொழுது இல்லை. அவர் எட்டாம் வகுப்பு தான் படிக்கிறார். குழந்தைகள் இருவரும் நன்றாக படித்து வருகின்றனர். தியா அப்பா செல்லம். தேவ் எங்கள் இருவருக்கும் செல்லம்" என்று பதில் அளித்துள்ளார்.

