சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள், உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதோடு நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி தலைமையிடம் மாற்றம் தேவை எனவும் வலியுறுத்தி கொண்டிருக்கின்றனர். இதனிடையில் நாம் தமிழர் கட்சியிலும் மாற்றம் தேவையென தொண்டர்கள் கோரிக்கைகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளன. இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், கட்சி கட்டமைப்பில் மாற்றம் செய்ய வேண்டுமென தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
நாதக சீமான்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிரமான பரப்புரைகளில் அவர் ஈடுபட்டார். அதோடு காரைக்குடியில் சீமான் களமிறங்கினார். இந்த முறை அவராவது தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைவார் என தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் நாதக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
வாக்கு சதவிகிதம்
அதோடு கடந்த முறை பெற்ற வாக்குகளை விடவும், இந்த தடவை நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் குறைந்தது. இது அக்கட்சியின் தொண்டர்களை கடுமையாக சோர்வடைய செய்துள்ளது. இதனிடையில் நாதக உட்கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென கட்சியினர் சீனியர்கள், தொண்டர்கள் பலரும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக கட்சியின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென கோரிக்கைகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள்
தற்போதைய சூழ்நிலையில் நாதகவில் 2,300 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஒரு சட்டமன்ற தொகுதியை பத்து பகுதிகளாக பிரித்து, அதற்கு 10 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற கட்சிகளில் இந்த கட்டமைப்பு இல்லை. இரண்டு, மூன்று தொகுதிகளுக்கு சேர்த்தே ஒரு மாவட்ட செயலாளர் என்ற முறை உள்ளது. இதனிடையில் நாதகவில் அதிக மாவட்ட செயலாளர்கள் இல்லாத காரணத்தால் முக்கியத்துவம் மற்றுமன் அதிகாரம் இல்லாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரமில்லாத பொறுப்புகள்
இதன் காரணமாக பல மாவட்ட செயலாளர்கள் ஒதுங்கி விட்ட காரணத்தாலே, ஒரு தொகுதியில் கூட நாதகவில் வெற்றி பெற முடியவில்லை என கட்சியின் நிர்வாகிகள் சீமானிடம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு நாம் தமிழர் கட்சியில் மகளிர், சுற்றுச்சூழல், இளைஞர் பாசறை என பல சார்பு அணிகள் உள்ளன. இதற்கு பல தலைமை ஒருங்கிணைப்பாளர்களை சீமான் நியமனம் செய்துள்ளார்.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்
இதற்கிடையில் சீமான் இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பல விதமான விவாதங்களை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

