தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. முதல் கட்சியாக காங்கிரஸ் தனது இடத்தை அடுத்து வரும் தேர்தல்களுக்கும் சேர்த்து உறுதி செய்துவிட்டது.
எஞ்சிய கட்சிகளிடம் தான் தெளிவான நிலைப்பாடு வெளிவரவில்லை. விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்டன. இடதுசாரிகள் வெளியில் இருந்து தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். அடுத்ததாக கூட்டணிக்குள் வருவதற்கு மதிமுக காய் நகர்த்தி கொண்டிருக்கிறது. எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
தவெக கூட்டணியா? தெளிவில்லாத கூட்டணி கட்சிகள்
அதேசமயம் தவெக தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பதில் தான் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. திமுக உடன் நட்புறவு, ஆட்சி கவிழ்ந்து விடக் கூடாது என ஆதரவு, குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே தற்போது இல்லை, தவெக கூட்டணியை பற்றி பரிசீலிப்போம் என்றெல்லாம் பேசி வருகின்றனர்.
திருமாவளவன் சர்ச்சையும், தவெக கூட்டணி குழப்பமும்
- குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன் பேசும் கருத்துகளை சுட்டிக் காட்டி, முன்னுக்கு முன் முரணாக பேசுகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை முன்வைப்பதாக விமர்சிக்கின்றனர்.
- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
- இந்த சூழலில் திமுக உடன் நட்புறவு தொடர்கிறது என திருமாவளவன் பேசியது பற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவருக்கு நோபல் பரிசு தான் கொடுக்க வேண்டும் என்று சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் பதிலளித்தார்.
- இதுபற்றி திருமாவளவன் பேசும் போது, வைகோவின் பரிந்துரைக்கு நன்றி. எனக்கு நோபல் பரிசு கிடைத்தால் அவருக்கு நன்றி சொல்வேன் என்று பதிலடி கொடுத்தார்.
- கிளைகள் கூட இல்லாத கட்சிக்கு 8 சீட்டை திமுக அளித்ததாக விசிகவை சீண்டும் வகையில் வைகோ ஏற்கனவே பேசியிருந்தார்.
- இதுபோன்ற கருத்து மோதல்கள் தவெக உடன் கூட்டணி கட்சிகள் இணக்கமான சூழலில் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
- மேலும் பாமக உடன் தவெக நெருங்கி செல்வது போன்ற காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
தவெக உடன் நெருங்கி வரும் பாமக
சமீபத்தில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை அன்புமணி, சவுமியா மற்றும் பாமக எம். எல். ஏக்கள் நேரில் சந்தித்து மேகதாது விவகாரம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அப்போது புஸ்ஸி ஆனந்த் நடந்து கொண்ட விதம் பேசுபொருளாக மாறியது. அன்புமணிக்கு அந்த அளவிற்கு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டார். இதுவும் கூட புதிய கூட்டணிக்கு அச்சாரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் விசிக, பாமக இடையில் அரசியல் ரீதியாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
Narrative செட் பண்ணும் எதிர்க்கட்சிகள்
பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறி விடும் என்று திமுக கூட்டணியில் இருந்த போதே திருமாவளவன் தெளிவுபடுத்தி இருந்தார். தற்போதும் அதே நிலைப்பாட்டில் தான் தொடர்வதாக கூறுகின்றனர். எனவே திருமாவளவன் பேச்சை முன்வைத்தும், பாமக கூட்டணி கணக்குகளை சுட்டிக் காட்டியும் தவெக தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும் சூழலை தடுக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டுகிறதோ என்ற கேள்விகள் எழுகின்றன.

