தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது புதிய ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கப்போவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக, இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாத மற்றும் மதவாத சக்திகளை இந்தக் கூட்டணியில் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்ற முக்கிய நிபந்தனையை காங்கிரஸ் விதித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின் மூலம், கடந்த பல ஆண்டுகளாகத் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. 2004, 2011, 2021 எனப் பல்வேறு முக்கியமான தேர்தல்களில் இணைந்து களம் கண்ட திமுக-காங்கிரஸ் உறவு, 2026-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது.
குறிப்பாக, நடந்து முடிந்த தேர்தலில் தொகுதிப் பங்கீட்டின்போது ஏற்பட்ட பெரும் இழுபறிக்குப் பிறகு காங்கிரஸிற்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும், இத்தேர்தலில் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது திமுக நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
காங்கிரஸின் இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்கள் இரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசலை மேலும் அதிகப்படுத்தின. மேலும், புதிய ஆட்சியில் பங்கு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் மாற்றங்கள் இந்தக் கூட்டணி முறிவிற்கு அடிப்படைத் தூண்டுகோலாக அமைந்தன.
ராகுல் காந்தி மற்றும் விஜய் ஆகியோரின் இந்த புதிய அரசியல் இணைவு, தமிழக மக்கள் வழங்கிய மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான தீர்ப்பை மதித்து எடுக்கப்பட்டதாகக் காங்கிரஸ் தரப்பில் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி அரசியல் மாற்றம், 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டு தவெக-விற்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸின் இந்தத் துணிச்சலான முடிவு, தேசிய அளவில் அக்கட்சியின் எதிர்காலக் கூட்டணிக் கணக்குகளை மாற்றியமைக்கும் காரணியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த புதிய கூட்டணி காமராஜர் காலத்து பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டுவரப் பாடுபடும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Seithi Punal
