தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பகுதியில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி, பாலியல் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த சமையல்காரரை, சிங்கப்பெண் அதிரடிப்படை காவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர்.
செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (31) சமையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திருமணமான இவர், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியதுடன், அவருக்கு இடையறாத தொந்தரவு அளித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவியிடம் முகம் சுளிக்க வைக்கும் வகையிலான ஆபாசச் செயல்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, பெண்கள் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வரும் 1091 என்ற கட்டணமில்லா அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி தலைமையிலான காவலர்கள் உடனடியாக செக்காரக்குடி பகுதிக்கு விரைந்து சென்று, சொக்கலிங்கத்தை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் சொக்கலிங்கம் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seithi Punal
