ஈரான் அணு ஆயுத தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒப்புதல் தராவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் சனிக்கிழமை சிங்கப்பூரில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது;
போர் நிறுத்தத்தை நீடிப்பதற்காக அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கையை தொடர்வதிலும் உறுதியாக இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதற்கான அத்தனை திறமையும், பலமும் எங்களிடம் இருக்கிறது என்றும், தாங்கள் தேவைக்கு அதிகமாகவே தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எங்களுடைய ராணுவத் தளவாட பலமானது ஈரானை தாண்டியும், உலகில் எங்கு வேண்டுமானாலும் போர் நெருக்கடியை சமாளிக்கும் அளவுக்கு சிறந்த இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஈரான் மோதலில் கவனமாக இருக்கும் அதே நேரத்தில் இந்தோ - பசிபிக் பிரச்சினையையும் நாங்கள் உற்று கவனித்து வருவதாகவும், எங்களால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய முடியும். அந்த வகையில் நாங்கள் எங்கள் ராணுவ பலத்தை மெருகேற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்றே அதிபர் டொனால்டு ட்ரம்ப் விரும்புகிறார் என்றும், அதே வேளையில் ஈரானுக்கு அணு ஆயுதங்கள் வசமாகக் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். அதுவே அவரது பொறுமைக்கும் காரணம் என்று கூறியுள்ளார்.

