பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகர் சரத்குமார் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பேற்று வெறும் இரண்டு வாரங்களே ஆன நிலையில், மக்களின் வாக்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குப் பொறுப்பளித்த மக்களின் நம்பிக்கையை மதிக்காமல், சொந்த அரசியல் லாபம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக பதவியை ராஜினாமா செய்வது ஜனநாயகத்தையே அவமதிக்கும் செயல் ஆகும்.

மக்கள் நலப் பணிகளை முன்னிறுத்த வேண்டிய நேரத்தில், சுயநல அரசியல் கணக்கீடுகளுக்காக பதவியை விட்டு விலகுவது தொகுதி மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
இதுபோன்ற சூழ்நிலைகளால் மறுதேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அந்த தேர்தலுக்காக அரசு மேற்கொள்ளும் முழு செலவையும், அவருக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர்கள் மேற்கொண்ட தேர்தல் செலவுகளையும் சம்பந்தப்பட்ட ராஜினாமா செய்த உறுப்பினரிடமே அபராதமாக வசூலிக்க வேண்டும்.
மேலும் மறுதேர்தல் நடைபெறும் தருணத்தில், மக்கள் இதுபோன்ற அரசியல் நிலைப்பாடு இல்லாதவர்களை முற்றிலும் புறக்கணித்து, பொறுப்புணர்வுடன் செயல்படும் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும்" என அவர் தெரிவித்திருக்கிறார்.
Seithi Punal
