திருச்சி அருகே கட்டப்பட்டு வரும் மெமு ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் பயன்பாட்டுக்கு வருவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த காட்டூர் அருகே மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே பொன்மலை ரயில்வே குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான 85,000 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தில் ரூ.61 கோடி மதிப்பில் மெமு ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணி 2026 மார்ச் மாதம் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடு முடிந்து கூடுதலாக 05 மாதங்கள் ஆகியும் இன்னமும் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை.
இதில் மெமு பராமரிப்பு மையம், நிர்வாக அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. தலா 12 பெட்டிகள் கொண்ட 02 மெமு ரயில்களை ஒரேநேரத்தில் முழுமையாக ஆய்வு செய்து பராமரிக்கும் வசதியும், 02 ரயில்களை ஒரே நேரத்தில் தூய்மைப்படுத்தும் வசதியும் இம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பராமரிப்பு மையத்துக்கு ரயில்கள் வந்து செல்லும் இணைப்பு ரயில் பாதைகள் அமைத்தல், பொன்மலை ரயில்வே குடியிருப்பு- கீழ கல்கண்டார்கோட்டை பகுதிகளை இணைக்கும் சாலையை மூடிவிட்டு மாற்றுப்பாதையாக சுரங்கப்பாதை அமைத்தல் ஆகிய பணிகள் முடிவடையாமல் உள்ளன.
அத்துடன், பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக புதிதாக அமைக்கப்படும் சுரங்கப்பாதைக்கு செல்லும் பாதையில் மின்மாற்றி மற்றும் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் செல்கின்றன. இவற்றை மாற்றி அமைத்து தரக் கோரி ரயில்வே நிர்வாகம் மின் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஆனால், மின்வாரிய அலுவலர்கள் பல்வேறு காரணங்களால் இப்பணிகளை செய்து தருவதில் தாமதம் செய்து வருகின்றனர். இதனால் மெமு பராமரிப்பு மையம் பயன்பாட்டுக்கு வருவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே உயரதிகாரிகள் கூறுகையில், மஞ்சத்திடல் மெமு ரயில் பராமரிப்பு மைய கட்டுமானப் பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துவிட்டன. மின் வாரியம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உட்பட சில பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் டிசம்பர் மாதம் மெமு ரயில் பராமரிப்பு மையம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறியுள்ளனர்.
Seithi Punal
