Dailyhunt
தமிழ்நாட்டின் DNA-வை சிதைக்க துடிக்கும் NDA.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

தமிழ்நாட்டின் DNA-வை சிதைக்க துடிக்கும் NDA.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

ரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.

அப்போது திமுக அரசின் செயல்பாடுகளையும், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு பேசினார். அத்துடன் தமிழ்நாட்டின் டி.என்.ஏவை எதிர்க்கட்சிகளின் NDA கூட்டணி சிதைக்க நினைப்பாதாக குற்றஞ்சாட்டினார். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, "அன்புக்கும், பண்புக்கும், விருந்தோம்பலுக்கும், பெயர்பெற்ற ஊர். பாசாங்கு இல்லாத பாசமிக்க மனிதர்கள் வாழும் ஊர், நம்முடைய மதுரை. தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர். எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஊர், மதுரை. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இரவு 12 மணிக்கு கூட ஆவி பறக்க சுடச்சுட இட்லி கிடைக்கும். அதனால்தான் தூங்கா நகரம் என்று சொல்கிறோம்.

மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல்தான் திராவிட மாடல். மகளிரை முன்னேற்றும் மாடல். இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் மாடல். முதியோர்களுக்கு அன்புக்கரம் நீட்டும் மாடல். எல்லாவற்றிற்கும் மேல், அனைத்து மக்களும் மதநல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான, மகத்தான மாடல்.

தமிழ்நாட்டின் DNA இது தான்
ஆனால், N.D.A. முன்வைப்பது வளர்ச்சியைக் கெடுக்கும் ஆரிய மாடல். மதநல்லிணக்கத்தை கெடுக்கும் ஆரிய மாடல். மக்களைப் பிளவுபடுத்தும் ஆரிய மாடல். இன்னும் சொன்னால், மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் வன்முறை மாடல். அண்ணன் தம்பியாக - அக்கா - தங்கையாக உறவுமுறையோடு பாசமாக பழகும் மதுரை மக்கள் மிகவும் புத்திசாலிகள். அதனால்தான், கலவரத்தை தூண்ட நினைத்தவர்களின் சதியை சிறப்பாக முறியடித்தீர்கள். அதற்காக உங்கள் பாதங்களையெல்லாம் தொட்டு நான் நன்றி கூறுகிறேன்.

மதுரைக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? கறிதோசை, பரோட்டா என்று நன்றாக சாப்பிட்டோமா, வெயிலுக்கு இதமாக ஒரு ஜிகர்தண்டாவை குடித்தோமா, தெப்பகுளம் பக்கமாக காலார நடந்தோமா, கோயில் திருவிழாக்களை கொண்டாடினோமா என அமைதியை விரும்புகின்றவர்கள் நீங்கள். இதுதான் தமிழ்நாட்டின் D.N.A.

: தேர்தல் 2026: உங்கள் வேட்பாளர்களின் விவரங்களை ஈசியாக ஆன்லைனில் பார்க்கலம்.. முழு விவரம் இங்கே

ஆனால், இதைச் சிதைக்க வேண்டும் என்று NDA துடிக்கிறார்கள். அவர்களின் அடிமைகளாக அ.தி.மு.க.வை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியிருக்கிறார் பழனிசாமி. அமைதியையும், வளர்ச்சியையும், சகோதர பாசத்தையும் முன்னிறுத்தும் தமிழ்நாட்டின் D.N.A.-வுக்கு மாறாக, சொந்த மண்ணுக்கும் - சொந்த மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கட்சியாக NDA இருக்கிறது. இவர்கள்தான், டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று தமிழ்நாட்டுக்குள் வர நினைக்கிறார்கள்.

மதுரை எய்ம்ஸ் எங்கே
இவர்களின் இலட்சணம் என்ன? மதுரைக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று எய்ம்ஸ் மருத்துவமனையை, 2015 பட்ஜெட்டில் அறிவித்தார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அடிக்கல் நாட்டினார்கள். அதற்குப் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தது; 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது; இப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. ஆனால், எய்ம்ஸ் மட்டும் வரவே இல்லை. இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூரில், 2017-இல் அடிக்கல் நாட்டி, 2022-இல் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க முடிந்த அவர்களால், மதுரை எய்ம்ஸை ஏன் உருவாக்க முடியவில்லை?

இதுவே நம்முடைய திராவிட மாடலில் அடிக்கல் நாட்டி ஒன்றரை வருடத்தில் இதே மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாகிவிட்டது. ஒன்றரை வருடத்தில் சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை உருவாகிவிட்டது. ஒன்றரை வருடத்தில் கோவையில் செம்மொழிப் பூங்கா உருவாகிவிட்டது. கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் அமைத்து திறந்து வைத்துவிட்டோம்.

ஏன் பா.ஜ.க.வால் நம்மை மாதிரி வேகமாக செயல்பட முடியவில்லை? ஏன் என்றால், அவர்களுக்கு தமிழ்நாடு மேல் இருக்கும் வெறுப்பு அப்படிப்பட்டது. அதனால்தான் கீழடி நம் தாய்மடி என நாம் கொண்டாடும் கீழடி ஆய்வறிக்கையை, இப்போது வரை வெளியிட மறுக்கிறார்கள்" என்று காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi