சென்னை, ஏப்ரல் 05 :சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதன்முறையாக பிரபல டிவியில் பேட்டியளிக்கும் விஜய்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் 234 தொகுதிகளிலும் நேரடியாக சென்று அவரது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க முடியுமா என்ற சந்தேகம் தற்போது உருவாகியுள்ளது. காரணம் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை பார்க்கும் ஆர்வத்தில் அவரது வாகனத்தை ஆபத்தான முறையில் பின் தொடர்வதால் விஜய் முக்கிய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காத விஜய் முதன்முறையாக பிரபல டிவிக்கு பேட்டியளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் நாயகன் என்ற நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 14, 2026 அன்று ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.முதன்முறை வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விஜய்
இந்த நிகழ்ச்சியில் அவர் தனது கட்சியின் கொள்கைகள், அவரது செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் போன்றவை குறித்து தெளிவாக உரையாடவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி மாலை 4 மணி முதல் 8 மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இதனால் அவரது கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் முதன்முறை வாக்காளர்கள் மற்றும் அவரது கட்சி தொண்டர்களின் கேள்விகளுக்கு நேரடியாக அவர் பதிலளிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜனநாயகன் படத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல், கரூர் கூட்ட நெரிசல் போன்ற தன்னை சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்தும் அவர் மனம் திறந்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் பேட்டி ஒளிபரப்பான பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
