சென்னை, செப்டம்பர் 1 :இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு முடியும் வரை, அம்பாசமுத்திரம் எம்எல்ஏவாக பணியாற்ற அனுமதிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளதாக அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா, உயர் நீதிமன்றத்தில் கூடுதலாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
எம்எல்ஏவாக செயல்பட அனுமதி கேட்ட இசக்கி சுப்பையா
இந்த நிலையில் ராஜினாமாவை வாபஸ் பெற்று எம்எல்ஏவாக தொடர அனுமதிக்கக் கோரிய இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவுக்கு எதிரான வழக்கில், இசக்கி சுப்பையா தாக்கல் செய்திருந்த கூடுதல் மனுவை விசாரிக்கவும் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துள்ளது. இது குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே தவெகவுக்கு போனவர்களே எம்எல்ஏவாக செயல்பட அனுமதிக்க கோரியுள்ளனர்.இதிலிருந்து தவெகவுக்கு போனவர்கள் எண்ணம் ஈடேறவில்லை என்றார். முன்னதாக தங்கள் கட்சியின் உத்தரவை மீறி தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிதத்தாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், அவர்களின் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு செப்டம்பர் 1, 2026இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த விசாரணை சம்பிரதாயமாக நடைபெற்றதாக வழக்கறஞர் தெரிவித்தார். ராஜினாமா கடிதம் அளித்த சில மணி நேரங்களிலேயே தவெகவில் இணைந்திருக்கின்றனர். இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தாமல், சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். ராஜினாவை ஏற்கும் முன் அதிமுக கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பபடவில்லை.
மேலும் குதிரை பேரம் நடத்துள்ளதாகவும் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது. சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜினாமாவை ஏற்றது சட்டபடி செல்லுபடியாகும், ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும் படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும். எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதனையடுத்து 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

