இந்தியாவில் மீண்டும் ஒருமுறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அமல்படுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைத்தொடர்பு கட்டணங்கள் உயர வாய்ப்பு?
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடஃபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வருகின்றன. ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த கட்டண உயர்வு விரைவில் எதிர்பார்க்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2027 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச் அமைப்பின் முன்னறிவிப்பு அறிக்கையின்படி, விரைவில் இந்தியாவில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையில் 15% வரை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. என தகவல் தெரிவிக்கின்றன. ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகலாம். அடுத்த கட்டண உயர்வு என்பது வெறும் நேரடி விலை உயர்வாக மட்டும் இருக்காது என்றும், விலை நிர்ணய கட்டமைப்பிலும் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பயனர்கள் அதிக டேட்டாவைப் பயன்படுத்தும்போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது போன்ற தகவல்கள் கடந்த ஆண்டிலிருந்தே வெளியாகி வருகின்றன. அதிக சேவைகளைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வகையில் இந்தக் கட்டண உயர்வு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிஎஸ்என்எல் கட்டணம் உயருமா?
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், பிஎஸ்என்எல்லின் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. அல்லது ஒருவேளை அவை உயர்த்தப்பட்டாலும், தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வைப் போல அது மிக அதிகமாக இருக்காது. கடந்த முறை தனியார் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியபோது பிஎஸ்என்எல் கட்டணங்களை உயர்த்தவில்லை; அதனால்தான் பலர் தனியார் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்ககிற்கு மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
