சென்னை, மே 9 : திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எங்கள் முடிவு திமுகவுடனான உறவை பாதிக்காது.
திமுக கூட்டணியில் தான் நாங்கள் தொடர்கிறோம் என்றார். மேலும் விஜய் தற்போது எங்கள் அலுவலகம் வர வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். பதவியேற்புக்குப் பிறகு சந்திக்கலாம் என விஜயிடம் கூறினேன் என்றார்.
'ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு'
மேலும் பேசிய அவர், தவெக RSS-ன் பிள்ளைகள் என்ற விமர்சனத்தில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. விசிகவால் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக வெளியிலிருந்து தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.திருமாவளவன் பேட்டி
இந்த நிலையில் தவெகவிற்கு விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்திருப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ஒரே நாளில் திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. நன்றி தெரிவிக்க கூட அண்ணா அறிவாலயம் வரவில்லை. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து திமுகவுடன் கைகோத்துப் போராடுவோம் என CPI, CPIM, விசிக அறிவித்தது திமுக மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்றார். மேலும், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும். மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைத்த நிலையில் தவெக தலைவர் விஜய் தனது ஆதரவு கட்சி தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். இதனையடுத்து அவர் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. பதவியேற்பு விழா குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

