நீலகிரி, ஆகஸ்ட் 23 : நீலகிரியில் 2 பேரைக் கொன்ற புலியை பிடிக்க சிறப்புக்குழு அமைத்து தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மனிதர்களை வேட்டையாடும் ஆட்கொல்லி புலியால் அச்சம்
நீலகிரியில் ஏரளாமான தேயிலை தோட்டங்கள் உள்ளன.இந்த நிலையில் தேயிலை தோட்டங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் தினமும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 9, 2026 அன்று வீட்டில் குடிநீர் வராததால் அதனை சரி செய்ய காபி தோட்டத்துக்கு அருகே சென்றபோது புலி தாக்கி பலியானார். வனத்துறையினரின் அலட்சியமே அவரது மரணத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது மறைந்திருந்த புலி அவரை தாக்கி, கொண்று அவரது உடல் பாகங்களை தின்றுள்ளது.
2 வாரங்களில் ஒரே கிராமத்தை சேர்ந்த அடுத்தடுத்து 2 பேர் புலியால் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை புலி பிடிபடாததால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்களின் போராட்டம் வலுத்த நிலையில், புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி, புலியை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டு, 22 கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ட்ரோன் மூலம் ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதுமலை புலி காப்பகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் சுற்றுலா விடுதிகள் என ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் புலிகள் ஊருக்குள் வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புலியின் புகைப்படம் தற்போது வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மனிதர்களை தாக்கும் இந்த புலி முதுமலை வனப்பகுதியில் உள்ள புலியா?
அல்லது அருகில் உள்ள கேரள வனப்பகுதியில் இருந்து வந்த புலியா? என அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த புலி பிடிக்கப்படும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தேயிலை தோட்ட பகுதிகள் அடர்த்தியாக இருப்பதால் புலியை பிடிப்பதில் வனத்துறையினருக்கு சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

