தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் தனது 10வது திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தனது கனவு நனவான தருணம் என கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த திரைப்படத்தை குனீத் மோங்கா அச்சின் ஜெயின் ஆகியோரின் சிக்யா எண்டர்டெயின்மென் நிறுவனத்துடன் தயாரித்து வருகிறார். இது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10வது படமாகவும் இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாகவும் உருவாகி வருகிறது.
முதன்முறையாக இளையராஜாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
இசைஞானி இளையராஜா திரையுலகில் தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இளையராஜாவுடன் இணைந்திருப்பது குறித்து அவர் தனது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்திக்கின்றனர். அப்போது கார்த்திக் சுப்புராஜுக்கு தனது கையெழுத்திட்ட கிட்டாரையும் அவர் பரிசாக வழங்குகிறார். அப்போது அவர் தனது கீபோர்டில் இசையமைத்தபடி சிரித்து மகிழும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்த அவர், இளையராஜாவின் இசையுடன் வளர்ந்த நான், இன்று அவருடன் வேலை செய்வது ஒரு சிறப்பான அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார்.கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்த வீடியோ
இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே மற்றும் தம்மா ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. மேலு் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் கதை தொடர்பான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், அண்மையில் வெளியான போர் பின்னணியில் உருவான நீலிரா திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். இதற்கிடையில், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து ரத்னகுமார் இயக்கத்தில் உருவான 29 என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இந்நிலையில், முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜ் - இளையராஜா கூட்டணி உருவாகியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

