பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அதில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி, நம் உடம்பில் இருக்கிற கபத்தை வெளியேற்றும்… அதைத்தான் நாம் சளி பிடித்துக்கொண்டதாக நினைக்கிறோம்.
அப்படிப்பட்ட நெல்லிக்காயில் சுவையான சட்னி செய்து சுவைக்கலாம்.
என்ன தேவை?
பெரிய நெல்லிக்காய் - 4 (கொட்டை நீக்கி பொடியாக நறுக்கவும்),
உதிர்த்த கறிவேப்பிலை - அரை கப்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 3 (அல்லது காரத்துக்கேற்ப),
பூண்டு - 2 பற்கள்,
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
எப்படிச் சமைப்பது?
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும் அத்துடன் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும். பிறகு, வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய நெல்லிக்காயை போட்டு வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் வதக்கவும். வதக்கியவற்றை ஒன்று சேர்த்து, மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும்.

