தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என இன்று (மார்ச் 29) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று முதல் ஏப்ரல் 2ஆம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுவுமில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

