இந்த வீக் எண்டில் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிடலாம் என்று நினைப்பவர்களின் முதல் எதிரியாக நிற்பது வெயில்.
இதைத் தவிர்க்க வீட்டிலேயே சுவையான, சத்தான இந்த தால் இட்லி செய்து ருசிக்கலாம்.
என்ன தேவை?
துவரம்பருப்பு - ஒரு கப்
பச்சரிசி, உளுத்தம்பருப்பு - தலா கால் கப்
வெந்தயக் கீரை - சின்னக்கட்டு
பச்சை மிளகாய் - 3 (அல்லது காரத்துக்கேற்ப)
இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
நெய், எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் சமைப்பது?
வெந்தயக் கீரை, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பு, பச்சரிசி, உளுத்தம் பருப்பை ஒன்றாக ஊறவைத்து சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் பச்சை மிளகாய், கீரை, இஞ்சி, எலுமிச்சைச்சாறு, மஞ்சள்தூள், உப்பு, நெய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, இட்லித்தட்டில் எண்ணெய் தடவி மாவை விட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இந்த இட்லிகளை சதுரம் சதுரமாக கட் செய்து சட்னி அல்லது இட்லி மிளகாய் பொடியுடன் பரிமாறவும்.

